பெண்ணைக் கட்டிப்போட்டு 10 சவரன் நகை கொள்ளை – மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
சென்னை: சென்னை, தாம்பரம் சேலையூர் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கட்டிப்போட்டு 10 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தாம்பரம் அடுத்த சேலையூர் அருகே உள்ள செம்பாக்கம் காவேரி தெருவை சேர்ந்தவர் கோபிநாத். வங்கி ஊழியர். இவரது மனைவி சுகன்யா. இவர் நேற்று மதியம் வீட்டில் தனியாக இருந்தார்.
அப்போது மர்ம ஆசாமி ஒருவர் வீட்டின் கதவை தட்டியுள்ளார். சுகன்யா கதவை திறந்தபோது வெளியில் நின்ற மர்ம நபர்கள் 2 பேர் திடீரென அவரை வீட்டின் உள்ளே தள்ளினார்கள்.
பின்னர் சுகன்யாவின் ஒருவர் சுகன்யாவின் கை, கால்களை கட்டிப்போட்டார். பின்னர் மர்ம நபர்கள் சுகன்யா அணிந்திருந்த செயின், வளையல் உள்பட 10 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து விட்டு கதவை பூட்டிவிட்டுச் சென்றனர்.
இதற்கிடையே சுகன்யா திருடன், திருடன் என சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் மர்மநபர்கள் தப்பிச் சென்றனர்.
பின்னர் அக்கம்பக்கத்தினர் பூட்டியிருந்த கதவை திறந்து சுகன்யா கட்டப்பட்டிருந்த கட்டுகளை அவிழ்த்து விட்டனர். இது குறித்து சுகன்யா சேலையூர் போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications