அரசு பேருந்தில் திடீர் தீ விபத்து... திருச்சியில் போக்குவரத்து நெரிசல்
திருச்சி: திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கடலூரிலிருந்து பயணிகளை ஏற்றி கொண்டு அரசு பேருந்து ஒன்று திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் வந்தடைந்தது. பேருந்து நிலையத்தில் பயணிகளை இறக்கி விட்டு பேருந்தை, ஓட்டுனர் கடலூர் மார்க்கத்தில் நிறுத்தியுள்ளார்.

அப்போது பேருந்தின் இன்ஜின் பகுதியில் இருந்து புகை வருவதை கண்ட ஓட்டுநர், பேருந்திலிருந்து கீழே இறங்கினர். புகை தீயாக மாறி, பேருந்து முழுவதும் மளமளவென எரிய தொடங்கியது.
இதை பார்த்த மக்கள், அலறி அடித்து கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடினர். தகவல் அறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் பேருந்து முற்றிலும் எரிந்து தீக்கிரையானது. அதிர்ஷ்டவசமாக பேருந்தில் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
அரசுப்பேருந்து தீ விபத்தை அடுத்து திருச்சி மாநகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. புறவழிச்சாலை, ஸ்ரீரங்கம், பாலக்கரையில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. பேருந்து எரிந்ததற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றன. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications