கர்நாடக பந்த் எதிரொலி: சென்னையில் இருந்து பெங்களூருக்கு காலை 11.30 மணியிலிருந்து பஸ்கள் இயக்கம்
சென்னை: கர்நாடகா பந்த் காரணமாக, சென்னை-பெங்களூர் நடுவேயான பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் இருந்து பெங்களூருக்கு செல்லும் பஸ்கள் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. காலை 11.30 மணிக்குதான் பகல் நேர முதல் பஸ் கோயம்பேட்டில் இருந்து சென்னை நோக்கி கிளம்பியது.
கோவா-கர்நாடக மாநிலங்கள் நடுவே ஓடும் மகதாயி நதியில் இருந்து கலசா-பண்டூரி என இரு கால்வாய்களை அமைக்க கர்நாடகா முயலுகிறது. இதற்கு கோவா எதிர்ப்பு தெரிவிக்கிறது. இதைக் கண்டித்தும், மேகதாதுவில் அணைகட்ட தமிழகம் எதிர்ப்பு தெரிவிப்பதை கண்டித்தும், கர்நாடகாவில் இன்று காலை 6 மணி முதல், பந்த் நடைபெறுகிறது. கன்னட ஆதரவு அமைப்புகள் அழைப்புவிடுத்த பந்த்துக்கு அரசு பஸ் கழகங்கள் முழு ஆதரவு அளித்துள்ளன.

எனவே பெங்களூரில் நகர பஸ்களும், வெளியூர் செல்லும் பஸ்களும் இயங்கவில்லை. காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை பந்த் நடைபெறுகிறது. எனவே தமிழகத்தில் இருந்து பெங்களூர் வந்த பஸ்கள் ஒசூர் எல்லையில் நிறுத்தப்பட்டன. இதனால் பெங்களூர் வரும் பயணிகள் அவதிப்பட்டனர்.
சென்னையில் இருந்து பெங்களூருக்கு பகல் நேரத்திலும் அவ்வப்போது கர்நாடக மற்றும் தமிழக அரசு போக்குவரத்து கழகங்கள் பஸ்கள் இயக்குவது வழக்கம். இன்று மாலை 6 மணிக்குள் கர்நாடக எல்லைக்குள் பஸ்கள் நுழைய முடியாது என்பதால், பஸ்கள் புறப்படும் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
இதன்படி சென்னை, கோயம்பேட்டில் இருந்து கர்நாடக அரசு பஸ்கள் காலை 11.30 மணிமுதல் புறப்பட தொடங்கியது. தமிழக அரசு பஸ்கள் 12 மணிக்கு கோயம்பேட்டில் இருந்து கிளம்பியது. ஆம்னி பஸ்கள், பகல் 2 மணி முதல் கிளம்புவதாக அறிவிக்கப்பட்டது.

இதன்மூலம், மாலை 6 மணிக்கு மேல் இந்த பஸ்கள் கர்நாடக எல்லைக்குள் நுழையும் வகையில் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. சென்னை-பெங்களூர் நடுவேயான அரசு பஸ்களின் பயண நேரம் சுமார் 7 மணி நேரம் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேநேரம், பெங்களூரில் இருந்து சென்னை உள்ளிட்ட தமிழக நகரங்களுக்கு மாலை 6 மணிக்கு மேல்தான் பஸ்கள் கிளம்ப உள்ளது.












Click it and Unblock the Notifications