மதுரை பஸ் நிலையத்தில் பயணியின் கன்னத்தில் அறைந்த தொழிற்சங்கத்தினர்!
மதுரை: மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் பயணியின் கன்னத்தில் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
போக்குவரத்துத் தொழிலாளர்கள் இன்று பிற்பகல் முதல் ஸ்டிரைக்கில் குதித்துள்ளனர். இதனால் தமிழகம் முழுவதும் பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்திலும் ஸ்டிரைக் தொடங்கியுள்ளது. இன்று மாலை தூத்துக்குடி செல்லும் பேருந்தை அதன் ஓட்டுநர் எடுத்தபோது திடீரென வந்த தொழிற்சங்கத்தினர் பஸ்சை நிறுத்துமாறு சத்தம் போட்டனர். டிரைவரை வாடா போடா என்று ஒருமையிலும் திட்டினர். இதனால் டிரைவரால் பஸ்ஸை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இதைப் பார்த்து கோபமடைந்த பயணிகள் உங்க ஸ்டிரைக்கால் நாங்கள் பாதிக்கப்பட வேண்டுமா என்று கேட்டனர். பின்னர் டிரைவரைப் பார்த்து பஸ்ஸை எடுங்க சார் என்று கூறியுள்ளனர். அப்போது ஒரு பயணி மீது பாய்ந்து வந்த தொழிற்சங்க பிரதிநிதி ஒருவர் கன்னத்தில் பளார் என அறைந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து தொழிற்சங்கத்தினர் அங்கிருந்து போய் விட்டனர். பயணியை தொழிற்சங்கத்தினர் அடித்த செயலுக்கு பயணிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். சம்பந்தப்பட்ட பஸ் டிரைவரும் தொழிற்சங்கத்தினர் அடாவடியாக நடந்து கொண்டனர் என்று குற்றம் சாட்டினார்.












Click it and Unblock the Notifications