சென்னையில் போக்குவரத்து ஊழியர்கள் மறியல் எதிரொலி... கடலூர், கோவை, நீலகிரி, திருப்பூரில் பஸ் ஸ்டிரைக்
சென்னையில் போக்குவரத்து ஊழியர்கள் மறியல் போராட்டத்தை தொடர்ந்து கடலூர், கோவை, நீலகிரி, திருப்பூர் ஆகிய இடங்களில் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Recommended Video
சென்னை: ஓய்வூதிய நிலுவைத் தொகை வழங்கக் கோரி சென்னையில் போக்குவரத்து ஊழியர்கள் மறியல் போராட்டத்தை தொடர்ந்து கடலூர், கோவை, நீலகிரி, திருப்பூர் ஆகிய இடங்களில் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஊதிய உயர்வு,ஓய்வூதியர்களுக்கான நிலுவைத் தொகையை உடனடியாக வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து கழக ஊழியர்கள் பல்லவன் இல்லத்தில் இன்று இரண்டவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் அவர்களை சமாதானப்படுத்த பல்லவன் இல்லத்துக்கு வந்த அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்களின் கோரிக்கைகள் குறித்து வரும் 27, 28 ஆகிய தேதிகளில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றார். இதை ஏற்று போராட்டத்தை விலக்கிக் கொள்வதாக தொழிற்சங்க தலைவர்கள் 10 பேர் கையொப்பமிட்டனர்.
தொழிற்சங்க தலைவர்களின் செயலை ஏற்க மறுத்த தொழிலாளர்கள் பல்லவன் இல்லம் அருகே ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பேருந்துகள் இயக்கம் நிறுத்தப்பட்டு போக்குவரத்து ஸ்தம்பித்தது.
சென்னை போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து கடலூர், கோவை, நீலகிரி, திருப்பூர் ஆகிய இடங்களில் உள்ள போக்குவரத்து ஊழியர்களும் பஸ் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பயணிகள் கடும் அவதிப்பட்டுள்ளனர்.