கோரிக்கை ஏற்கப்படும்வரை வேலை நிறுத்தம்.. 7வது நாளாக தொடரும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்
போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் 7 வது நாளாக தொடர்ந்து நடைபெறுகிறது.
சென்னை: கிராமம் நகரம் என தமிழகம் முழுக்க போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போக்குவரத்து ஊழியர்களின் இந்த போராட்டம் 7வது நாளாக இன்றும் தொடர்கிறது.
தமிழக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் கடந்த 4-ந் தேதியில் தமிழகம் முழுக்க போராட்டம் செய்து வருகின்றனர். ஊதிய உயர்வு உட்பட 7 அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி இவர்கள் போராடுகிறார்கள். இதனால் தற்போது தற்காலிக போக்குவரத்து பணியாளர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
இந்த போராட்டம் குறித்த பேச்சு வார்த்தை அனைத்தும் தோல்வியில் முடிந்துவிட்டது. இந்த நிலையில் போராட்டம் இன்றும் தொடர்கிறது. கோரிக்கை ஏற்கப்படும்வரை வேலை நிறுத்தம் தொடரும் என்று ஊழியர்கள் அறிவித்து இருக்கிறார்கள்.
போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக தமிழகம் மொத்தமும் முடங்கி இருக்கிறது. ஆனால் தமிழக அரசு இனி பேச்சுவார்த்தைக்கு இடம் இல்லை என்று ஏற்கனவே கூறிவிட்டது.
இன்னும் இரண்டு தினங்களில் பொங்கலுக்கு மக்கள் ஊருக்கு செல்ல தொடங்கிவிடுவார்கள். ஆனால் இன்னும் பொங்கல் முன்பதிவு மையங்கள் துவங்கப்படவில்லை. எனவே போக்குவரத்து ஊழியர்கள் எப்போது பணிக்கு திரும்புவார்கள் என தெரியாமல் மக்கள் கவலையில் உள்ளனர்.