மார்ச் மாதத்திற்குள் ஸ்ரீரங்கம் தொகுதியில் இடைத் தேர்தல் நடத்தப்படும் - பிரவீன் குமார்
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது இதனை அவர் தெரிவித்தார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவரது முதல்வர் பதவியும், எம்.எல்.ஏ பதவியும் பறி போய் விட்டது. இதனால் தொகுதி சட்டப்படி காலியாக உள்ளது. ஆனால் இதுகுறித்து முறையாக தேர்தல் ஆணையத்திற்கு தமிழக சட்டசபை செயலகம் தகவல் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பிரவீன் குமார் இதுகுறித்துக் கூறுகையில், ஆறு மாதத்திற்குள் அதாவது மார்ச் மாதத்திற்குள் இடைத் தேர்தல் நடத்தப்படும். இதுகுறித்து தேர்தல் ஆணையம்தான் அறிவிக்கும். தேதியையும் தேர்தல் ஆணையமே அறிவிக்கும் என்றார்.
மேலும் அவர் கூறுகையில், நாளை முதல் வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளப்படும் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தத்திற்கு அக்டோபர் 15ஆம் தேதி முதல் நவம்பர் 10ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்த பிரவீன்குமார், www.elections.tn.gov.in என்ற இணையதளத்திலும் விண்ணப்பிக்கலாம் என்றார்.
ஸ்ரீரங்கம் சட்டப்பேரவை தொகுதி எம்.எல்.ஏ.வான ஜெயலலிதா, சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் அவர் தானாகவே எம்.எல்.ஏ பதவியை இழந்தார். இதனால், அந்த தொகுதி்க்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்று தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன.
இந்நிலையில், ஸ்ரீரங்கம் சட்டப்பேரவை தொகுதிக்கு 6 மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.