வெளி மாநிலத்தில் இருந்தும் மிரட்டுகிறார்கள்.. கதறிய சி.ஆர்.சரஸ்வதி கமிஷனர் அலுவலகத்தில் புகார்
தொலைபேசி மூலம் தனக்கு கொலை மிரட்டல்கள் வருவதாக அதிமுக செய்தித் தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி புகார் தெரிவித்துள்ளார்.
சென்னை: தன்னுடைய தொலைபேசிக்கு ஏராளமானோர் தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுப்பதாக அதிமுக செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
ஜெயலலிதா மறைவை அடுத்து சசிகலா அதிமுக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து அவரே முதல்வராக பதவி ஏற்க காய் நகர்த்தி வந்தார். சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்றதால். அது நிறைவேறாமல் போனது. இந்நிலையில் ஜெயலலிதாவின் ஆதரவாளரான சி.ஆர்.சரஸ்வதி அவரது மறைவிற்கு பின்னர் சசிகலாவின் ஆதரவாளராக மாறியுள்ளார்.
இந்நிலையில், சி.ஆர்.சரஸ்வதி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் இன்று ஒரு புகார் அளித்துள்ளார். அந்த மனுவில், இரவு 10 மணிக்கு மேல் ஏராளமானோர் என்னுடைய செல்போனுக்கு தொடர்பு கொண்டு கொலை மிரட்டல் விடுகின்றனர்.
மேலும், ஆபாசமாகவும் பேசுகிறார்கள். தமிழ்நாட்டிலிருந்து மட்டுமில்லாமல், வெளி மாநிலங்களிலிருந்து என்னை தொடர்பு கொண்டு திட்டுகிறார்கள். தற்போதைய அரசியல் சூழ்நிலை பற்றி நான் பேட்டி அளித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆபாசமாக பேசி வருகிறார்கள்.
அதேபோல் முன்னாள் அமைச்சர்கள் பா.வளர்மதி, கோகுல இந்திரா, மற்றும் நடிகை விஜயசாந்தி ஆகியோருக்கும் மிரட்டல் வருகிறது. போலீசார் இதுபற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.