நாட்டில் முதல் முறை.. செங்கல்பட்டில் அமைகிறது மருத்துவ பூங்கா.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்
சென்னை: நாட்டிலேயே முதல் முறையாக செங்கல்பட்டில், மருத்துவ பூங்கா அமைக்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியது.
நாட்டின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பற்றி ஆலோசனை நடத்த, மத்திய அமைச்சரவை கூட்டம், பிரதமர் மோடி தலைமையில், டெல்லியில் இன்று நடைபெற்றது. உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட அமைச்சர்கள் இதில் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தெரிகிறது.
மேலும் தமிழகத்தின் செங்கல்பட்டில் மருத்துவ பூங்கா அமைக்க HLL என்ற நிறுவனத்திற்கு 330.10 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு அளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்த மருத்துவ பூங்காவில் பல தரப்பட்ட மருத்துவ உபகரணங்கள் (medical devices) தயாரிக்கும் தொழில் நிறுவனங்கள் தங்களது நிறுவனங்களை தொடங்கும். படிப்படியாக இங்கு நிறுவனங்கள் தொடங்கப்படும். 7 வருடங்களுக்குள் முழு பணிகளும் முடிவடைந்து, நிறுவனங்கள் செயல்பட ஆரம்பிக்கும்.
நாட்டிலேயே இதுபோன்ற மருத்துவ பூங்கா ஒன்று அமைவது இதுதான் முதல் முறை என்று கூறப்படுகிறது. 'மேக் இன் இந்தியா' என்ற கோஷத்தோடு, உள்நாட்டிலேயே அனைத்து பொருட்களையும் உற்பத்தி செய்ய வேண்டும் என்று மத்திய அரசு எடுத்துவரும் முயற்சிகளின் ஒரு அங்கம் இந்த மருத்துவ பூங்கா என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று எய்ட்ஸ் தடுப்பு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.












Click it and Unblock the Notifications