காலண்டருக்கு வந்த சோதனை... விலை கிடுகிடு உயர்வு!
கோவில்பட்டி: பேப்பர் விலை உயர்வு, தொடர் மின்தடை போன்ற காரணங்களால் ஆர்டர் குறைந்ததால் காலண்டர் விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது.
ஆண்டுதோறும் புத்தாண்டையொட்டி காலண்டர்கள், டைரிகள் போன்றவற்றுக்குத்தான் பெரும் கிராக்கி ஏற்படும்.
பலர் தங்களது சொந்த உபயோகத்திற்கும், பலர் நண்பர்கள், உறவினர்களுக்கு புத்தாண்டுப் பரிசாக அளிக்கவும் வாங்கிடுவார்கள். ஆனால் இந்த ஆண்டு இவற்றின் விலை அதிகரித்துள்ளதாம்.

காலண்டர் வாங்கக் கூட்டம்
ஆண்டுதோறும் புத்தாண்டு பிறந்து விட்டால் புத்தக கடை, பேன்சி கடைகளில் புத்தாண்டு காலண்டர் வாங்க கூட்டம் அலைமோதும். புத்தாண்டை முன்னிட்டு பெரிய கடைகளில் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு அவர்களது நிறுவனம் சார்பில் தயாரித்து தங்கள் ஊழியர்கள், மற்றும் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்குவார்கள்.

சாமி படம்.. இயற்கைக் காட்சிகள்
தமிழகத்தில் சிவகாசி, கோவில்பட்டி பகுதிகளில் உள்ள அச்சகங்களில் சுவாமி படங்கள், இயற்கரை காட்சிகள் போன்ற பல படங்களில் காலண்டர் அச்சடிக்கப்பட்டு வருகிறது. இந்த தொழிலில் பல ஆயிரம் ஈடுபட்டு வருகின்றனர்.

விலை உயர்வு.. தயாரிப்பு மந்தம்
இந்நிலையில் பேப்பர் விலை, பசை, அட்டை, மின் கட்டண உயர்வு, மின் தடை போன்ற காரணங்களால் இந்தாண்டு காலண்டர் தயாரிப்பில் மந்த நிலை காணப்படுகிறது.

ஆர்டர் வரவில்லை
புத்தாண்டுக்கு 6 மாதஙகளுக்கு முன்பாகவே வெளியிடங்களில் இருந்து அதிக ஆர்டர் வரும். இந்தாண்டு போதிய ஆர்டர்கள் வரவில்லை என்று பிரிண்டிங் பிரஸ் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

குறைந்தது ரூ. 5 உயர்வு
கடந்த ஆண்டு ரூ.20க்கு விற்ற சாதாரண தினசரி காலண்டர் இந்தாண்டு ரூ.25 ஆக உயர்ந்துள்ளது. 10, 15 அளவு காலண்டர் ரூ.15லிருந்து ரூ.20க்கும், 10, 15 இன்ச் லேமினேசன் காலண்டர் ரூ.20லிருந்து ரூ.25க்கும், 20, 15 இன்ச் காலண்டர் ரூ.72லிருந்து ரூ.86க்கும், 20, 15 இன்ச் மாத காலண்டர் ரூ.20லிருந்து ரூ.24க்கும், 20, 30 இன்ச் மாத காலண்டர் ரூ.44லிருந்து ரூ.52க்கும் விற்கப்படுகிறது.

தயாரிப்பாளர்கள் கவலை
வெளியிடங்களில் இருந்து வரும் ஆர்டர்கள் முற்றிலும் குறைந்து விட்டதாக தயாரிப்பு நிறுவன உரிமையாளர்கள் கவலை தெரிவித்தனர். மேலும் தொழிலாளர்கள் போதிய அளவு இல்லாததால் காலண்டர் தயாரிப்பு நிறுவனங்கள் திணறி வருகின்றன.












Click it and Unblock the Notifications