மறந்து விடாதீர்.. மறந்தும் இருந்து விடாதீர்.. உங்கள் ஓட்டு.. நாளையுடன் முடியுதுப்பா அனல் பிரச்சாரம்!
சென்னை: வீடுக்கு வீடு, வீதிக்கு வீதி, தெருவுக்குத் தெரு, ஊருக்கு ஊர், மாவட்டத்துக்கு மாவட்டம் அனல் பறக்க நடந்து வந்த சட்டசபைத் தேர்தல் ஒரு வழியாக நாளை மாலை 5 மணியுடன் ஓய்வடைகிறது.
நாளை மாலை 5 மணிக்கு மேல் டோர் கேன்வாஸ் மட்டுமே செய்ய அனுமதி உண்டு. மற்றபடி மைக் கட்டிப் பிரச்சாரம் செய்யக் கூடாது.
தமிழக சட்டசபைக்கு வருகிற 16ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் 22ம் தேதி தொடங்கி 29ம் தேதி வரை நடைபெற்றது. மே 2ம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

3776 பேர் போட்டி
234 தொகுதிகளிலும் 3,776 பேர் போட்டியிடுகிறார்கள். இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான பலமுனைப் போட்டியைத் தமிழகம் கண்டுள்ளது.

6 முனைப் போட்டி
திமுக, அதிமுக, மக்கள் நலக் கூட்டணி, பாமக, நாம் தமிழர், பாஜக என ஆறுமுனைப் போட்டி நிலவுகிறது. அனைத்துத் தரப்பினரும் நாடி நரம்பு புடைக்க தீவிரமான பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

தலைவர்கள்
முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின், மக்கள் நலக் கூட்டணியின் ஆறு தலைவர்கள், பாமக தலைவர் டாக்டர் அன்புமணி, ராமதாஸ், பாஜக தலைவர்கள், நாம் தமிழர் தலைவர் சீமான் என அனைத்துக் கூட்டணி தலைவர்களும் புயல் வேகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுளளனர்.

தேசியத் தலைவர்கள்
இவர்கள் போக டெல்லியிலிருந்து பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, திரளான மத்திய அமைச்சர்கள் என தேசியப் படையும் தமிழக தேர்தல் களத்தை வலம் வந்து சென்றுள்ளது. பல முனைப் போட்டி என்பதால் யாருக்கு வெற்றி என்பதில் இன்னும் கூட தெளிவில்லாத நிலையே காணப்படுகிறது.

நாளையுடன் முடிகிறது
இந்த நிலையில் அனல் பறக்க நடந்து வந்த தேர்தல் பிரச்சாரம் நாளையுடன் முடிவடைகிறது திமுக தலைவர் கருணாநிதி நாளை சிந்தாதிரிப்பேட்டையில் தனது கடைசிக் கட்ட பிரச்சாரத்தை மேற்கொள்கிறார். ஸ்டாலின் கொளத்தூரிலும், வைகோ தூத்துக்குடியிலும், விஜயகாந்த் வேளச்சேரியிலும், அன்புமணி பென்னாகரத்திலும், தமிழிசை செளந்தரராஜன் விருகம்பாக்கத்திலும் முடிக்கிறார்கள்.

நேற்றே முடித்து விட்ட ஜெயலலிதா
முதல்வர் ஜெயலலிதா நேற்றே தனது பிரச்சாரத்தை முடித்து விட்டார். நெல்லையில் நேற்று நடந்த பிரச்சாரக் கூட்டம்தான் அவரது கடைசிப் பிரச்சாரக் கூட்டமாகும். விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் காட்டுமன்னார்கோவிலிலும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடலூரிலும் பிரசாரத்தை நிறைவு செய்கிறார்கள்.

முக்கிய வேட்பாளர்கள
முதல்வர் ஜெயலலிதா ஆர்.கே நகரிலும், திமுக தலைவர் கருணாநிதி திருவாரூரிலும், மு.க.ஸ்டாலின் கொளத்தூரிலும், விஜயகாந்த் உளுந்தூர்ப்பேட்டையிலும், அன்புமணி பென்னாகரத்திலும், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கடலூரிலும், தமிழிசை செளந்தரராஜன் விருகம்பாக்கத்திலும் களம் கண்டுள்ள முக்கியவேட்பாளர்களில் சிலர்.

கருத்துக் கணிப்புகள் கூடாது
நாளை மாலை 5 மணிக்கு பிரச்சாரம் முடியும்போது கூடவே கருத்துக் கணிப்புகளையும் நிறுத்தி விட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நாளை மாலை 5 மணி முதல் வாக்குப் பதிவு முடியும் வரை கருத்துக் கணிப்புகளை நடத்தவும், முடிவுகளை வெளியிடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

வெளியூர்க்காரவுக போய்ருங்கப்பா
மேலும் நாளை முதல் 16ம் தேதி வரை தேர்தல் தொடர்பான எந்த கூட்டங்களோ, ஊர்வலங்களோ நடத்தக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன் சமூக வலைத்தளங்கள் மற்றும் குறுஞ்செய்திகள் மூலமாக பிரசாரம் செய்யக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு தொகுதியிலும் வெளியூர்காரர்கள் தங்கி இருக்கக்கூடாது என்றும், வாக்காளர்கள் அல்லாதவர்கள் நாளை மாலை 6 மணிக்குப் பிறகு தொகுதியை விட்டு வெளியேறி விட வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. மதுக்கடைகளை மூடவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

5.82 கோடி வாக்காளர்கள்
வெற்றி வாய்ப்புக்காக காத்திருக்கும் வேட்பாளர்களின் தலையெழுத்தையும், அதை விட முக்கியமாக தங்களது தலையெழுத்தையும் 5.82 கோடி வாக்காளர்கள் மே 16ம் தேதி முடிவு செய்யவுள்ளனர்.












Click it and Unblock the Notifications