"மாஃபா" சார், ஓபிஎஸ் செய்தது சந்தர்ப்பவாதம்னா.. அப்ப நீங்க செஞ்சது "எந்தர்ப்பவாதம்"??
முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் செய்தது சந்தர்ப்பவாதம் என்று கூறியுள்ளார் மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்.
சென்னை: முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் செய்தது கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதம் என்று கூறியுள்ளார் சசிகலா ஆதரவு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன். அப்படியானால் இவரை முழுமையாக நம்பி, நம்பிக்கையுடன் பல காரியங்களைக் கொடுத்த விஜயகாந்த்துக்கு இவர் செய்தது எந்த வகையிலானது என்ற கேள்வியை மக்கள் எழுப்புகின்றனர்.
ஓ.பன்னீர் செல்வம் கை மேலும் மேலும் வலுத்து வரும் நிலையில் இன்று பிற்பகலில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான போயஸ் தோட்டத்துக்கு ஓடிய அமைச்சர்கள், அங்கு வசித்து வரும் சசிகலாவுடன் ஆலோசனை நடத்தினர். பின்னர் பாண்டியராஜன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது முதல்வரை கடுமையாக விமர்சித்தார்.
அவர் கூறுகையில், கட்சிக்குள் பிளவு ஏற்படக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். பன்னீர்செல்வம் கருத்தில் உண்மை இல்லை. பன்னீர்செல்வத்தை மீறி எந்த முடிவும் எடுக்கவில்லை. பன்னீர்செல்வத்துக்கு அழுத்தம் கொடுக்கப்படவில்லை. அனைத்து முடிவுகளுக்கும் உடன் இருந்துவிட்டு தற்போது மாற்றி பேசுவது போலித்தனம். 48 மணி நேரத்திற்கு பின் நிர்பந்தம் குறித்து பேசுவது சிரிப்புக்கு இடமானது. பன்னீர் செல்வத்தின் செயல்பாடு கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதம் என்றார் அவர்.
ஓ.பன்னீர் செல்வம் செய்தது கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதமாகவே இருக்கட்டும். ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்கு மேல் யாருக்குமே தெரியாமல் இருந்த பாண்டியராஜனுக்கு தேமுதிக மூலமாக ஒரு அடையாளம் ஏற்படுத்திக் கொடுத்தவர் விஜயகாந்த். இவரை விஜயகாந்த் நிறையவே நம்பினார். பல பொறுப்புகளையும் கொடுத்தார். எம்.எல்.ஏ சீட்டும் கொடுத்து எம்.எல்.ஏ. ஆக்கினார். அப்படிப்பட்ட விஜயகாந்த்தை இவர் நட்டாற்றில் விட்டு வந்தது எந்த வகையிலான சந்தர்ப்பவாதம் என்பதை பாண்டியராஜன் விளக்க வேண்டும் என்று மக்கள் கேட்கிறார்கள்.