ரஜினி 'மாற்று சக்தி'யாக திகழ வாய்ப்பில்லை... "மாமூல்" அரசியல்வாதியாகவே களமிறங்குகிறாராம்...!
ரஜினிகாந்த் ஒரு மாற்று சக்தியாக இல்லாமல் மாமூல் அரசியல்வாதியைப் போலவே களமிறங்க போகிறாராம்.
சென்னை: தம்மை வாழ வைத்த தமிழகத்துக்கு நல்லது செய்யப் போகிறேன் என்கிற முழக்கத்துடன் அரசியல் களத்துக்கு வருகிறார் ரஜினிகாந்த். ஆனால் ஒரு மாற்று சக்தியாக ரஜினிகாந்த் இருக்கப் போவதில்லை... வழக்கமான பக்கா மாமூல் அரசியல்வாதியாக களமிறங்கத்தான் ரஜினி திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதோ..அதோ வருகிறேன் என அரசியல் களத்தில் பூச்சாண்டி காட்டியவர் ரஜினிகாந்த். இப்போது காலா படத்தை முடித்துவிட்டு கட்சி தொடங்க திட்டமிட்டிருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்.
இது தொடர்பாக அரசியல் கட்சித் தலைவர்கள், அரசியல் ஆலோசகர்கள் பலரையும் ரஜினிகாந்த் தொடர்ந்து சந்தித்து வருகிறார். இச்சந்திப்புகளில் தமக்கான செல்வாக்கு எப்படியெல்லாம் வாக்குகளாக மாறும் என கேட்டு வந்தார் ரஜினிகாந்த்.
மாற்று திட்டமே இல்லையாம்
இச்சந்திப்புகளில் பங்கேற்றவர்களை நாம் தொடர்பு கொண்டு பேசினோம். அவர்களைப் பொறுத்தவரையில் ரஜினிகாந்திடம் புதியதாக மாற்று திட்டம் எதுவுமே இல்லை என்கின்றனர்.
வழக்கமான பார்முலா
வழக்கமாக திமுக, அதிமுக கட்சிகள் பின்பற்றும் தேர்தல் பார்முலாவைத்தான் ரஜினியும் பின்பற்ற விரும்புகிறாராம். தேர்தல்களின் போது ஜாதிய அடிப்படையில்தான் வேட்பாளர்களை களமிறக்குகின்றன அரசியல் கட்சிகள்.
யாரை இறக்குவது?
ஆனால் தம்மிடம் உள்ள ரசிகர் மன்ற நிர்வாகிகளை தேர்தல் களத்தில் நிறுத்தினால் அவர்களுக்கு வாக்கு கிடைக்குமா? அல்லது அந்த தொகுதிகளில் கணிசமான செல்வாக்குடன் இருக்கும் பிற அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களை களமிறக்கினால் வாக்குகள் கிடைக்குமா? என வாக்குகளைத்தான் ரஜினி குறிவைக்கிறாராம்.
முதல்வர் பதவிதான்...
அத்துடன் எப்படியாவது முதல்வர் நாற்காலியில் அமர்ந்துவிட வேண்டும் என்பதுதான் ரஜினியின் ஒற்றை இலக்காக இருக்கிறதாம். முழுமையாக ஒரு பக்கா அரசியல்வாதியாக மட்டுமே ரஜினிகாந்த் களமிறங்க விரும்புகிறார் என்றே கூறப்படுகிறது.