சசிகலா கோஷ்டி கை ஓங்கினால் அதிமுக உடைவது உறுதி: மத்திய உளவுத்துறை கருத்து
அதிமுகவில் சசிகலா கோஷ்டியின் நடவடிக்கைகளை அக்கட்சி தொண்டர்கள் கவனித்து வருகின்றனர். அந்த கோஷ்டியின் கை ஓங்கினால் கட்சி உடைவது உறுதி என்கிறது உளவுத்துறை வட்டாரங்கள்.
சென்னை: சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் கை ஓங்கினால் அதிமுக உடைவது உறுதி என மத்திய உளவுத்துறை வட்டாரங்கள் கருதுகின்றன.
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அதிமுகவில் மிகப் பெரிய வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அக்கட்சியை வழிநடத்துவதற்கான 2-ம் கட்ட தலைவர்கள் எவருமே இல்லை.
ஆகையால்தான் இதுவரை நேரடி அரசியலுக்கே வராத சசிகலாவின் பெயரும் பொதுச்செயலர் பதவிக்கு அடிபடுகிறது. ஆட்சிக்கு ஓபிஎஸ், கட்சிக்கு சசிகலா என்ற நிலையை உருவாக்கி பின்னர் மெல்ல மெல்ல கட்சியையும் கபளீகரம் செய்யவது என்பது மன்னார்குடி தரப்பின் ப்ளான்.

மத்திய உளவுத்துறை கண்காணிப்பு
அதிமுகவின் தற்போதைய நிலை அக்கட்சி தொண்டர்களை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. அதிமுகவில் நடக்கும் ஒவ்வொரு அசைவையும் மத்திய உளவுத்துறை மிக மிக உன்னிப்பாக கவனித்து வருகிறது.

சகிக்க முடியாத தொண்டர்கள்
அப்பல்லோ மருத்துவமனையில் இருந்தபோது அதிமுக மூத்த தலைவர்கள் ஒருவரைக் கூட ஜெயலலிதாவை சந்திக்கவிடாமல் சசிகலா தடுத்ததை அதிமுகவினரால் இன்னமும் சகித்துக் கொள்ள முடியவில்லை. ஜெயலலிதா மருத்துவமனையில் இருப்பதை பயன்படுத்திக் கொண்டு ஆட்சியையும் கட்சியையும் ஒட்டுமொத்தமாக தமது கட்டுப்பாட்டில் சசிகலா வைத்திருந்ததையும் அதிமுக தொண்டர்களால் ஏற்க முடியவில்லை என்கிறது மத்திய உளவுத்துறை வட்டாரங்கள்.

ஜெ.வுக்கான மவுனம் காத்த தலைவர்கள்
ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்ததால் அதிமுகவின் மூத்த தலைவர்கள் பலரும் இதுபற்றி எதுவுமே பேசாமல் அமைதிகாத்திருந்தனர். அப்படி சசிகலா கோஷ்டிக்கு எதிராக ஜெயலலிதா உயிருடன் இருக்கும்போதே கலகக் குரல் எழுப்பினால் கட்சிக்கு கெட்ட பெயர் என பலரும் அமைதி காத்தனர் என்கிறது மத்திய உளவுத்துறை.

அதிமுக உடைந்துவிடும்...
தற்போதைய நிலையில் அடுத்த சில மாதங்கள் அதிமுகவின் எதிர்காலத்தை தீர்மானிக்கக் கூடியதாக இருக்கும்... குறிப்பாக சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரின் நடவடிக்கைகள், கட்சி மற்றும் ஆட்சியில் தலையீடுகள் அதிகரிக்குமேயானால் நிச்சயமாக அதிமுகவில் இதற்கு கடும் எதிர்ப்பு எழும்; இதனால் அதிமுக உடைவது உறுதி என்றுதான் மத்திய உளவுத்துறை கருதுகிறது.

சசிகலா கையில்தான்...
ஆகையால் அதிமுக ஒன்றாக இருப்பதும் உடைவதும் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரின் கைகளில்தான் உள்ளது. அதிமுக ஒன்றாக இருக்க வேண்டும் என விரும்பினால் அக்கட்சியின் கட்டமைப்பை சீர்குலைக்காத வகையில் தங்களது நடவடிக்கைகளை சசிகலா கோஷ்டி பார்த்துக் கொண்டால் சரி எனவும் கருதுகிறது உளவுத்துறை.












Click it and Unblock the Notifications