மோதலை மனு தாக்கலில் இருந்தே தொடங்கும் கட்சிகள்... அதிமுக, திமுக, தினகரன் நாளை வேட்பு மனு!
அதிமுக, திமுக, தினகரன் உள்ளிட்ட 3 பேரும் நாளை ஆர்கே நகர் இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கலை செய்கின்றனர்.
சென்னை : சென்னை ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக, திமுக வேட்பாளர்கள் மற்றும் தினகரன் உள்ளிட்டோர் நாளை வேட்பு மனு தாக்கல் செய்கின்றனர்.
சென்னை ஆர்கே நகர் இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கலுக்கு இன்னும் 3 வேலை நாட்களே உள்ளதால் வேட்பு மனு தாக்கல் பணியில் வேட்பாளர்கள் தீவிரமாக உள்ளனர். இதுவரை 7 வேட்பாளர்கள் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். அரசியல் கட்சி சார்பாக நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கலைக்கோட்டுதயம் நேற்று மனு தாக்கல் செய்துள்ளார்.

அதிமுகவின் வேட்பாளரை தேர்வு செய்வதில் இழுபறி நீடித்த நிலையில் அவைத்தலைவர் மதுசூதனன் மீண்டும் போட்டியிட ஆட்சி மன்றக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதனையடுத்து மதுசூதனன் நாளை வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார்.
இதே போன்று திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மருதுகணேசும் நாளை வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். டிசம்பர் 1ம் தேதி பிற்பகல் 1 மணிக்கு வேட்புமனு தாக்கலுக்கு நேரம் கேட்டு டிடிவி. தினகரன் தரப்பில் இருந்து தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
எனவே நாளை சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகம் பிரதான அரசியல் கட்சியினரால் நிரம்பி வழியப் போகிறது. ஆர்கே நகர் தேர்தலில் போட்டியிடப் போவதாக ஜெ. தீபா அறிவித்த நிலையில் அவர் எப்போது வேட்புமனு தாக்கல் செய்கிறார் என்ற தகவல் வெளியாகவில்லை. இதே போன்று பாஜகவும் ஆர் கே நகர் தேர்தலில் தங்களின் வேட்பாளரை இன்னும் அறிவிக்காமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications