வேட்பாளர்களே எட்டிப் பார்க்காத நெல்லை மாவட்ட மீனவ கிராமங்கள்...
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் அமைந்துள்ள சில மீனவ கிராமங்களில் வேட்பாளர்கள் உள்ளே வந்து பிரச்சாரம் செய்ய அங்கிருந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அக்குறிப்பிட்ட கிராமங்களில் மட்டும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளப்படவில்லை.
இன்றைய தமிழக லோக்சபா தொகுதி தேர்தலையொட்டி அனல் பறக்கும் வெயிலிலும் அயராது கட்சிகள் தீவிர வாக்குச் சேகரிப்பு பணியில் ஈடுபட்டன. ஆனால், நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள இடிந்தகரை, கூட்டப்புளி, பெருமணல் ஆகிய 3 மீனவ கிராமங்களுக்கு பிரச்சாரம் செய்ய வேட்பாளர்கள் யாரும் செல்லவில்லை.
அதற்குக் காரணம், முன்னதாகவே அப்பகுதி மக்கல் கூடி அங்கு யாரும் பிரச்சாரம் செய்ய வரக்கூடாது என முடிவு செய்தது தான். இதனால் அப்பகுதி வேட்பாளர்களால் அங்கு பிரச்சாரம் செய்ய இயலவில்லை.
நெல்லை தொகுதி ஆம்ஆத்மி கட்சி வேட்பாளர் மைபா ஜேசுராஜீக்கு ஆதரவாக உதயகுமார் பிரசாரத்திற்கு சென்ற போது அப்பகுதி மீனவ மக்கள் இங்கு பிரசாரத்திற்காக வரவேண்டாம் என தடுத்து விட்டனர். இதனால் உதயகுமாரும் அப்பகுதியில் பிரச்சாரம் செய்யாமல் திரும்பி சென்று விட்டதாக அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன.