இந்தியா முழுவதும் மோடி அலை, தமிழகத்தில் "கேப்டன்" அலை: சொல்வது பிரேமலதா!
கன்னியாகுமரி: நாடு முழுவதும் மோடி அலை வீசுகிறது.. தமிழகத்தில் கேப்டன் அலை வீசுகிறது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா கூறியுள்ளார்.
கன்னியாகுமரி லோக்சபா தொகுதி பாரதிய ஜனதா வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் நாகர்கோவில் மீனாட்சிபுரம் அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் முன் திறந்தவேனில் நின்று பேசியதாவது:

தேசிய ஜனநாயக கூட்டணி தமிழக மக்களுக்கான கூட்டணி, இளைஞர்களுக்கான கூட்டணி, இளம்சிங்கங்களின் கூட்டணி, அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு மாற்றாக உருவான கூட்டணி. நிச்சயமாக யார் தயவும் இல்லாமல் 300 இடங்களுக்குமேல் இடங்களைப் பிடித்து இந்த கூட்டணி தனித்து ஆட்சி அமைக்கும்.
தமிழ்நாட்டில் இந்த தொகுதியை முதன்மைத் தொகுதியாக மாற்ற இந்த கூட்டணி பாடுபடும். மின்வெட்டு இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்றுவோம். நதிநீரை இணைப்போம். பெட்ரோல், டீசல் விலையை குறைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தை தடுப்போம்.
மீனவர்களுக்கு இனிமேல் எந்த பாதிப்பும் இருக்காது. கச்சத்தீவை மீட்டெடுப்போம். இந்த கூட்டணியை மக்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
நதிநீர் இணைப்பைப் பற்றி முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். இதன்மூலம் அறிவிப்பு அரசியலை அவர் மீண்டும் தொடங்கி விட்டார்.
தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆருக்கு பிறகு மக்களின் ஒட்டுமொத்த ஆதரவை பெற்றவர் கேப்டன் விஜயகாந்த் மட்டுமே. இந்தியா முழுவதும் மோடி அலை வீசுகிறது. தமிழ்நாட்டில் கேப்டன் அலை வீசுகிறது. 2 பேரும் சேர்ந்து நல்ல ஆட்சியைத் தரப்போகிறார்கள். மோடி மூலம் இந்தியா வல்லரசு ஆகும். கேப்டன் மூலம் தமிழ்நாடு நல்லரசு ஆகும்.
இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.












Click it and Unblock the Notifications