சென்னை: மேம்பாலத்தில் சென்ற போது தீப்பிடித்து எரிந்த கார்... தப்பி ஓடிய பெண்கள்
சென்னை: சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த ஸ்கார்பியோ காரில் திடீர் என தீப்பற்றி எரிந்தது. காரில் பயணம் செய்த 5 பெண்கள் மற்றும் ஓரு குழந்தையும் பத்திரமாக உயிர் தப்பியுள்ளனர்.
சென்னையில் இருந்து செஞ்சி நோக்கி இன்று ஒரு ஸ்கார்ப்பியோ கார் சென்று கொண்டிருந்தது. பிற்பகல் 3.30 மணியளவில் கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தில் கார் சென்று கொண்டிருந்த போது திடீரென கார் தீப்பிடித்து எரிந்தது.
அந்த காரில் 5 பெண்களும் ஒரு குழந்தையும் பயணம் செய்து கொண்டிருந்தனர். கார் தீப்பற்றிய உடன் அதிர்ச்சியடைந்த அனைவரும் காரை விட்டு இறங்கி வெளியே ஓடினர். தீ மளமளவென பரவி கொளுந்து விட்டு எரிந்தது.
பாலத்தின் மீது தீ எரிவதைப் பார்த்த உடன் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் எரிந்து கொண்டிருந்த காரின் தீயை கட்டுப்படுத்தினர்.
அதிக வெயில் காரணமாக என்ஜீனில் தீப்பற்றியிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கார் தீப்பிடித்து எரிந்த போது எழுந்த புகை மூட்டம் காரணமாக ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எரிந்து கொண்டிருந்த காரின் தீயணைக்கப்பட்ட உடன் தற்போது போக்குவரத்து சீராடைந்துள்ளது.
தீ பிடித்து எரிந்த போது டிரைவர் சாமர்த்தியமாக காரை ஓரம் கட்டியதால் காரில் பயணித்த அனைவரும் உயிர் தப்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.