சீட் பெல்ட் அணியாததால் போலீஸ் அடி... சென்னையில் தீக்குளித்த கார் ஓட்டுநர் கவலைக்கிடம்!
சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் சீட் பெல்ட் அணியாததால் போலீசார் தாக்கியதில் ஆத்திரமடைந்த கார் ஓட்டுநர் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
சென்னை : சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் சீட் பெல்ட் அணியவில்லை என்று போலீசார் அடித்ததால் ஆத்திரம் அடைந்த கார் ஓட்டுநர் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 65 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கார் ஓட்டுநரின் உடல்நிலை கவலைக்கிடமானதாக இருக்கிறது.
சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் ஹாலிடே இன் விடுதிக்கு அருகில் கார் ஓட்டுநர் ஒருவரை போலீசார் மடக்கிப் பிடித்துள்ளனர். அவர் சீட் பெல்ட் அணிந்து கார் ஓட்டவில்லை என்று போலீசார் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த கார் ஓட்டுநர் தனக்குத் தானே உடலுக்கு தீ வைத்துக் கொண்டுள்ளார். இதனையடுத்து ஆபத்தான நிலையில் ஓட்டுநர் மீட்கப்பட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
பொதுமக்கள் போராட்டம்
ஓட்டுநரின் தற்கொலை முயற்சி சம்பவத்திற்கு போலீசாரே காரணம் எனக் கூறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டள்ளனர். நடுரோட்டில் போலீசாரை கண்டித்து கார் ஓட்டுநர் தீக்குளித்த சம்பவம் அந்தப் பகுதியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மணிகண்டன்
இதனிடையே தீக்குளித்த கார் ஓட்டுநர் திருநெல்வேலியைச் சேர்ந்த மணிகண்டன் என்றும், தாம்பரத்தில் தங்கி வாடகை கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருவதும் தெரிய வந்துள்ளது. சென்னை தாம்பரம் எஸ்ஆர்பி டூல்ஸ் அருகே இன்று காரில் வந்த போது சீட் பெல்ட் அணியவில்லை என்று போக்குவரத்து காவலர்கள் 4 பேர் மணிகண்டனை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
போலீசாரின் நடவடிக்கையால்
இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் காரை சர்வீஸ் சாலையில் நிறுத்திவிட்டு, தனது வாகனத்தில் இருந்த பெட்ரோலை ஒரு வாட்டர் பாட்டிலில் நிரப்பி எடுத்து வந்து தன் உடல் மீது ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார். இதனையடுத்து போக்குவரத்து போலீசார் அங்கிருந்து கிளம்பிச் சென்றுள்ளனர். சீட் பெல்ட் அணியவில்லை என்று கால் முறியும் அளவு போலீசார் அடித்ததால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டதாக மீட்கப்பட்ட போது மணிகண்டன் தெரிவித்துள்ளார்.
கார் ஓட்டுநர் கவலைக்கிடம்
சுமார் 65 சதவீத தீக்காயங்களுடன் மணிகண்டன் கீழ்ப்பாகம் மருத்துவமனையில் அனுமதிகிக்கப்பட்டுள்ளார். இதனால் அவருடைய உடல்நிலை கவலைக்கிடமாகவே உள்ளதாக தெரிகிறது.