ஈரோடு அருகே கார்-லாரி நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து: 3 பேர் பலி, 2 பேர் படுகாயம்
ஈரோடு: ஈரோடு அருகே சாலை விபத்தில் மூன்று பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தமிழரசன், மணிகண்டன் மற்றும் நாமக்கல் மாவட்டம் கூட்டபள்ளியை சேர்ந்தவர் தணிகைவேல். இதேபோல் திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவை சேர்ந்த பார்த்திபன், அருண்குமார். இவர்கள் ஐந்து பேரும் ஈரோடு மூலப்பாளையத்தில் நிதிநிறுவனம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கரூரில் இருந்து ஈரோட்டிற்கு நேற்று 5 பேரும் காரில் வந்துள்ளனர். காரை தமிழரசன் ஓட்டி வந்துள்ளார். ஈரோடு அருகேயுள்ள சோலாரில் கார் வந்தபோது. ஈரோட்டில் இருந்து கரூர் சென்ற லாரியின் மீது நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில் தமிழரசன், மணிகண்டன் மற்றும் தணிகைவேல் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பார்த்திபன், அருண்குமார் ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர்.
இதனை கண்ட அப்பகுதியினர் காயமடைந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ பகுதிக்கு வந்த மொடக்குறிச்சி போலீசார் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசுதலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.