அதிமுக ராஜ்யசபா வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சின்னதுரைக்கு எதிரான மனு- ஹைகோர்ட் தள்ளுபடி
சென்னை: உள்ளாட்சி அமைப்பு நிதியில் இருந்து ரூ.2 கோடி ஊழல் செய்ததாக அதிமுகவின் ராஜ்யசபா வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சின்னத்துரை மீது நடவடிக்கை கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
சென்னை ஹைகோர்ட்டில் தூத்துக்குடி மாவட்டம் வீர பாண்டிய பட்டினத்தை சேர்ந்தவர் எம்.கணேசன். இவர் ஹைகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-
தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து கவுன்சில் தலைவராக சின்னதுரை என்பவர் உள்ளார். இவர் போலி ஆவணங்கள் மூலம் உள்ளாட்சி அமைப்பு நிதியில் இருந்து ரூ.2 கோடி ஊழல் செய்ததாக புகார் எழுந்தது. இந்த புகார் குறித்து ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜாமணி தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையில் சின்னதுரை மீதான ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு மேல் நடவடிக்கைக்காக மாவட்ட கலெக்டருக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, சின்னதுரை மீதான ஊழல் குற்றச்சாட்டு குறித்து நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அகர்வால், நீதிபதி ரவிச்சந்திர பாபு ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. "இந்த வழக்கில் எதிர் மனுதாரராக சின்னதுரை மீதான குற்றச்சாட்டு குறித்து ஊழல் கண்காணிப்பு துறையில் பரிசீலனையில் உள்ளது. எனவே, இந்த மனுவை தள்ளுபடி செய்கிறோம்" என தீர்ப்பளித்தனர்.
தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து தலைவராக இருந்த சின்னதுரை அ.தி.மு.க., சார்பில் ராஜ்யசபா வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டிருந்தார். அதற்காக மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் இந்த வழக்கு தொடரப்பட்டதால் அ.தி.மு.க.வின் நாடாளுமன்ற ராஜ்யசபா வேட்பாளராக அறிவிக்கப்பட்டது வாபஸ் பெறப்பட்டது. அத்துடன் அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.