கிரானைட் பி.ஆர்.பி. குடும்பத்தின் 2,769 ஏக்கர் நிலத்தை பறிமுதல் செய்ய கோரும் மனு- சென்னைக்கு மாற்றம்
மதுரை: நிலச் சீர்திருத்த சட்டத்துக்கு எதிராக பி.ஆர்.பி. கிரானைட் உரிமையாளர் பழனிச்சாமியின் குடும்பம் வைத்திருக்கும் சொத்துகளை பறிமுதல் செய்து நிலமற்ற ஏழைகளுக்கு வழங்கக்கோரிய மனு சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
மதுரை நொண்டிக்கோயில்பட்டியை சேர்ந்த சோமசுந்தரம் 2013ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் பொதுநலன் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில் சோமசுந்தரம் கூறியிருந்ததாவது:
மதுரை மாவட்டத்தில் 49 வருவாய் கிராமங்களில் 175 கிரானைட் குவாரிகள் அமைந்துள்ளன. மதுரை மாவட்ட கிரானைட் குவாரிகளில் ரூ.16 ஆயிரம் கோடிக்கு முறைகேடு நடைபெற்றதாக மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த சகாயம், அரசுக்கு அறிக்கை அனுப்பினார்.
இந்த முறைகேடு தொடர்பாக மாவட்ட நிர்வாகமும், போலீசாரும் விசாரணை நடத்தினர். பின்னர், பி.ஆர்.பி. உள்பட பல்வேறு கிரானைட் நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் போலீசார் தெரிவித்துள்ள கணக்குப்படி பி.ஆர்.பி. நிறுவனத்துக்கு தமிழகம் முழுவதும் ரூ.25,000 கோடி மதிப்புக்கு 24,300 ஏக்கர் நிலம் வைத்துள்ளனர்.
தமிழக நிலச்சீர்த்திருத்த சட்டத்தின்படி, 5 பேர் கொண்ட ஒரு குடும்பத்துக்கு சொந்தமாக 15 ஏக்கர் நிலம் மட்டும் இருக்கலாம். ஒரு குடும்பத்தில் 5 பேருக்கும் அதிகமானோர் இருந்தால் கூடுதலாக உள்ள ஒவ்வொருக்கும் தலா 5 ஏக்கர் நிலம் இருக்கலாம்.
ஆனால் மேலூர் வட்டத்தில் பி.ஆர்.பி. நிறுவனத்துக்கு 1,834 ஏக்கர் நிலம், மதுரை வடக்கு வட்டத்தில் 934 ஏக்கர் நிலமும் வைத்திருப்பதாக தகவல் உரிமை சட்டத்தில் தகவல் கேட்டபோது வட்டாட்சியர்கள் தகவல் அளித்தனர்.
இந்த இரு வட்டங்களில் மட்டும் பிஆர்பி நிறுவனம் 2,769 ஏக்கர் நிலம் வைத்துள்ளது. இது நில சீர்திருத்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளதை காட்டிலும் அதிகப் படியானதாகும்.
ஆகையால் பி.ஆர்.பி. நிறுவனம் மீது நில சீர்திருத்த சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், கூடுதலாக உள்ள நிலத்தை கையகப்படுத்தி நிலமற்ற ஏழைகளுக்கு வழங்கவும் உத்தர விடவேண்டும்.
இவ்வாறு சோமசுந்தரம் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, வி.எஸ்.ரவி ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வழக்கறிஞர்கள் பி.ரத்தினம், ஏ.ராகுல் ஆகியோர், கிரானைட் தொடர்பான வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், இந்த மனுவையும் அங்கு மாற்ற வேண்டும் என்றனர்.
இதையடுத்து மனுவை சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications