ரூ. 2000 கிடைக்கவில்லை.. ரிசர்வ் வங்கிக்கு எதிரான ஐகோர்ட்டில் வழக்கு.. நவ. 16ல் தீர்ப்பு
ரூ. 2000 கிடைக்காததால் ரிசர்வ் வங்கியை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் நவம்பர் 16ம் அன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
சென்னை: தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில் ரூ. 2000 நோட்டு கிடைக்காததால் ரிசர்வ் வங்கியை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பு வரும் 16ம் தேதி வழங்கப்பட உள்ளது.
கடந்த 8ம் தேதி 500 மற்றும் 1000 ரூபாய் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. இதனால் இந்தியா முழுவதும் மக்களிடம் பணம் இல்லாத சூழல் உருவானது. மக்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுக்களை வங்கி மற்றும் அஞ்சலகங்களில் செலுத்தி புதிய ரூபாய் நோட்டுக்களை பெற்றுக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்தது.

இந்நிலையில், விழுப்புரத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி என்பவர், தான் கணக்கு வைத்திருக்கும் கூட்டுறவு வங்கியில் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றச் சென்றுள்ளார். அப்போது, வங்கி நிர்வாகம் தங்களுக்கு புதிய ரூபாய் நோட்டுகள் வராத காரணத்தால் ராமமூர்த்திக்கு பழைய நோட்டை மாற்றித் தர முடியாது என்று கூறியுள்ளது.
இதனையடுத்து, ராமமூர்த்தி சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், நான் கணக்கு வைத்திருக்கும் கூட்டுறவு வங்கியில் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற சென்றபோது, வங்கி நிர்வாகம் சார்பில் ரிசர்வ் வங்கி கூட்டுறவு வங்கிகளுக்கு ரூபாய் நோட்டுகள் தருவது இல்லை என்றும், அதனால் நோட்டை மாற்றி தர இயலாது என்றும் தெரிவிக்கப்பட்டது. அதனால் கூட்டுறவு வங்கிகளுக்கு புதிய நோட்டுகளை தர உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு இன்று நீதிபதி கிருபாகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், மத்திய அரசின் உத்தரவால் சில சங்கடங்கள் ஏற்படும் என்றும் புதிய ரூபாய் நோட்டு பெறுவது தற்காலிமானதுதான் என்றும் கூறியுள்ளார். மேலும் இவ்வாறு ரூபாய் நோட்டுகளை மாற்றும் போது தொந்தரவுகளை பொறுத்து கொள்ள வேண்டும் என்றும் நீதிபதி கூறினார்.
வரும் 16ம் தேதிக்கு தீர்ப்பை ஒத்தி வைத்த நீதிபதி கிருபாகரன், கூட்டுறவு வங்கி வாடிக்கையாளர்களை மனதில் கொண்டு தீர்ப்பு வழங்கப்படும் என்றும் கூறினார்.












Click it and Unblock the Notifications