முதல்வர் கையை வெட்டுவேன் என்று சொன்ன கலைராஜன் மீது வழக்கு- கைதாவாரா?
முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் கையை வெட்டுவேன் என்று மிரட்டிய விடுத்த முன்னாள் அதிமுக எம்எல்ஏ கலைராஜன் மீது தேனாம்பேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சென்னை: கடந்த சில தினங்களுக்கு முன்பு போயஸ் தோட்டத்தின் முன்பு பேசிய முன்னாள் அதிமுக எம்எல்ஏ கலைராஜன் மீது தேனாம்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அதிமுகவில் ஓபிஎஸ் அணி, சசிகலா அணி என்று பிரிந்துள்ளது. போயஸ் கார்டன் முன் கூடும் சசிகலா அணியினர் மற்றும் அதிமுக நிர்வாகிகள்,முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை விமர்சித்து ஊடகங்களிடம் தொடர்ந்து பேட்டி அளித்து வருகின்றனர்.
தியாகராயநகர் சட்டசபைத் தொகுதி முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ கலைராஜன் சில தினங்களுக்கு முன்பு பேசும் போது கட்சியை கைப்பற்ற நினைத்தால் ஓ.பி.எஸ்சின் கையை வெட்டுவேன் என்று மிரட்டும் தொனியில் பேசினார்.
இதனைத் தொடர்ந்து கடந்த 10ஆம் தேதி சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞரான செல்லப் பாண்டி என்பவர்,தமிழக முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்த கலைராஜன் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறை அலுவலகத்தில் மனு செய்திருந்தார்.
நேற்று கலைராஜன் மீதான குற்றச்சாட்டு குறித்து காவல்துறை உயரதிகாரிகள்,போயஸ் கார்டன் வளாகத்தில் விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து போயஸ் கார்டன்,தேனாம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்டது என்பதால் கலைராஜனுக்கு எதிரான புகார் தேனாம்பேட்டை காவல்நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
காவல்துறை உயரதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில், தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் முன்னாள் எம்எல்ஏ கலைராஜன் மீது கொலை மிரட்டல் உட்பட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் கலைராஜனை கைது செய்வது குறித்தும் காவல்துறையினர் ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் பேசியது தவறு என்று கூறியும் தம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று கலைராஜன் கூறியுள்ளார்.