ஆண்டாள் பற்றிய சர்ச்சை பேச்சால் சிக்கலில் வைரமுத்து.. 3 பிரிவுகளில் போலீஸ் வழக்குப்பதிவு
ஆண்டாள் விவகாரம் தொடர்பாக கவிஞர் வைரமுத்து மீது இந்து முன்னணி சார்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Recommended Video
ராஜபாளையம்: ஆண்டாள் குறித்து தவறாக விமர்சனம் செய்ததாக கூறி கவிஞர் வைரமுத்து மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாளிதழ் சார்பில், ஸ்ரீவில்லிப்புத்தூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆண்டாள் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கில் தமிழை ஆண்டாள் என்ற தலைப்பில் வைரமுத்து பேசிய சில கருத்துகள் சர்ச்சையக்குரியதாக கூறப்படுகிறது.
வெளிநாட்டு ஆய்வாளர் வெளியிட்ட ஆண்டாள் குறித்த சர்ச்சைக்குரிய கருத்தையும் மேடையில் வைரமுத்து கூறியதால் பலரும் அதிர்ச்சியடைந்தனர். மேலும் ஆண்டாள் வாழ்ந்த காலம், தெய்வம் மற்றும் கடவுளுக்கிடையே உள்ள வித்தியாசம் குறித்து வைரமுத்து விளக்கிய விதத்தால் கருத்தரங்கில் இருந்தவர்கள் அதிருப்தியில் ஆழ்ந்தனர்.
இதனைத்தொடர்ந்து வைரமுத்துவுக்கு ஹெச்.ராஜா, இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன. அவருக்கு எதிராக வைணவர்களும் பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது ஒருபுறமிருக்க ஸ்டாலின், சீமான், வைகோ, உள்ளிட்ட பல கட்சி தலைவர்களும், பிரபலங்களும் வைரமுத்துவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்.
தன்னுடைய பேச்சுக்கு வைரமுத்து வருத்தம் தெரிவித்த நிலையில், இந்து முன்னணி சார்பாக அவர் மீது புகார் கொடுக்கப்பட்டது. விருதநகர் மாவட்டம் ராஜபாளையம் நகர இந்து முன்னணி செயலாளர் சூரி என்பவர் வைரமுத்து மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை தொடர்ந்து தெற்கு ராஜபாளையம் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வைரமுத்து மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.