ஸ்டெர்லைட் வழக்கு நடக்கிறது... விரைவில் ஆலை மூடப்படும்.. தூத்துக்குடியில் ஓபிஎஸ் பேட்டி
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான வழக்கு நடைபெறுகிறது, விரைவில் ஆலை நிரந்தரமாக மூடப்படும் என்று தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்...
Recommended Video
தூத்துக்குடி : ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான வழக்கு நடைபெறுகிறது, விரைவில் ஆலை நிரந்தரமாக மூடப்படும் என்று தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பேட்டியளித்துள்ளார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டிற்கு எதிராக போராட்டம் செய்த அப்பாவி மக்கள் மீது போலீஸ் மூர்க்கமாக துப்பாக்கியால் தாக்குதல் நடத்தியது. இந்த மோசமான தாக்குதல் காரணமாக 14 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
பலர் இன்னும் உயிருக்கு போராடிக் கொண்டு இருக்கிறார்கள். இதில் காயமடைந்தவர்கள் எல்லோரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மக்கள் இந்த மோசமான சம்பவம் காரணமாக மத்திய மாநில அரசு மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள்.
இன்று காலை தூத்துக்குடியில் சிகிச்சை பெறும் மக்களை சந்தித்தார் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம். ஸ்டெர்லைட் போராட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். நேற்று இரவே இதற்காக அவர் மதுரைக்கு சென்று இருந்தார். பாதிக்கப்பட்டவர்களை சந்தித்துவிட்டு அவர் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்தார். ஆனால் பத்திரிக்கையாளர்கள் யாரும் மருத்துவமனைக்கு உள்ளே அனுமதிக்கப்படவில்லை.
துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன். காயமடைந்த மக்களுக்கு என்னுடைய அனுதாபத்தை தெரிவிக்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் நலம் பெறுவார்கள். துப்பாக்கி சூடு நெஞ்சை உருக்கும் சம்பவமாக உள்ளது.
மக்களின் கோரிக்கையை ஏற்று ஸ்டெர்லைட் 2013ல் மூடப்பட்டது.ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான வழக்கு நிலுவையில் உள்ளது. அரசு இதில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. விரைவில் ஆலை மூடப்படும் என்று மக்களுக்கு உறுதியளிக்கிறேன்.
தூத்துக்குடியில் அமைதி திரும்பி உள்ளது. அரசு யாரையும் தேவையில்லாமல் கைது செய்யவில்லை. இங்கே மிகவும் சாதாரண சூழ்நிலை நிலவுகிறது. பாதுகாப்பும் அமைதியும் திரும்பியுள்ளது.
காயமடைந்தவர்கள் கோரிக்கையை அரசு நிறைவேற்றும்.அரசு தன் கடமையை சரியாக செய்து வருகிறது. அம்மா வழியில் ஆட்சி சிறப்பாக நடக்கிறது. தூத்துக்குடியில் மட்டுமல்ல தமிழகம் முழுக்க அரசு மீது எந்த விதமான அதிர்ச்சியும் இல்லை. மக்கள் ஆதரவு அரசிற்கு இருக்கிறது, என்றுள்ளார்.