கோவையில் சட்டக்கல்லூரியில் இருபிரிவு மாணவர்கள் மோதல்: 42 பேர் மீது வழக்குப்பதிவு
கோவை: கோவையில் உள்ள அரசு சட்டக்கல்லூரி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலால் 4 மாணவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மோதலுக்குக் காரணமான 42 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை மருதமலை சாலையில் உள்ள அரசு சட்டக்கல்லூரியில் 1400க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகிறார்கள். கடந்த சில நாட்களாக மாணவர்களுக்குள் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வருகிறது.
கடந்த 24ம் தேதி வியாழக்கிழமையன்று இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. தொடர்ந்து 28ம் தேதியும் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் 6 மாணவர்கள் காயம் அடைந்தனர்.
இரு தரப்பு புகாரின் பேரில் 18 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து கல்லூரி நிர்வாகம் 30 மாணவர்களை கல்லூரியில் இருந்து தற்காலிக நீக்கம் செய்தது. நீக்கம் செய்யப்பட்ட மாணவர்களுக்கு ஆதரவாக ஒரு தரப்பு மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்த சென்றனர்.
இதையறிந்த மற்றொரு தரப்பு மாணவர்களும் பேச்சுவார்த்தைக்கு வந்ததாக கூறப்படுகிறது. அப்போது இருதரப்பினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே கைகலப்பானது.
மாணவர்கள் கத்தி, உருட்டுக்கட்டை உள்ளிட்ட ஆயுதங்களுடன் மோதலில் ஈடுபட்டனர். விடுதியில் நிறுத்தியிருந்த 3 மோட்டார் சைக்கிள்கள் அடித்து நொறுக்கப்பட்டன. வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த மேலும் ஒரு மோட்டார் சைக்கிள் தீ வைத்து கொளுத்தப்பட்டது.
இதில் மாணவர்கள் ஜெயபால், முருகேசன், ஆனந்தராஜ், அழகுராஜா ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தகவல் அறிந்ததும் வடவள்ளி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். போலீஸ் எஸ்.பி. சுதாகர் சம்பவ இடத்தை பார்வையிட்டார்.
இது குறித்து கல்லூரி நிர்வாகத்திடம் கேட்டபோது மோதல் சம்பவத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
பின்னர் போலீஸ் எஸ்.பி. சுதாகரிடம் கேட்டபோது பாதிக்கப்பட்ட மாணவர்களிடமிருந்து புகார் பெறப்பட்டவுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அதன்படி மாணவர்கள் புகார் அளித்தனர். புகாரின் பேரில் 38 மாணவர்கள் மீது தனியாகவும், 4 மாணவர்கள் மீது தனியாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தாக்குதல் நடத்திவிட்டு தலைமறைவாகிவிட்ட மாணவர்களை போலீசார் தேடி வருகிறார்கள். மாணவர்கள் மோதலால் கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.