தஞ்சையில் தண்டவாளத்தில் சமையல் .. வாழை இலை போட்டு சாப்பிட்டு விவசாயிகள் நூதன போராட்டம் #cauvery
தஞ்சாவூர்: காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக் கோரியும், கர்நாடகத்திற்கு சார்பாக நடந்து கொள்ளும் மத்திய அரசைக் கண்டித்தும் தண்டவாளத்தில் சமைத்து உண்டும் தலை வைத்துப் படுத்தும் தஞ்சாவூர் விவசாயிகள் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
காவிரி நதி நீர் பிரச்சனையில் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வரும் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2 நாட்கள் ரயில் மறியல் போராட்டத்திற்கு அழைப்புவிடுத்திருந்தனர். அதன்படி இன்று காலை 6 மணியில் இருந்து ரயில் மறியல் போராட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
காவிரி நதி நீர் பாயும் முக்கிய மாவட்டமான தஞ்சை மாவட்ட விவசாயிகள் இந்தப் போராட்டத்தில் பெருமளவில் பங்கேற்றுள்ளனர். இங்குள்ள தஞ்சை ரயில் நிலையத்தில் விவசாயிகள், ரயில்வே தண்டவாளத்திலேயே அமர்ந்து உணவு சமைத்து உண்டும் தண்டவாளத்தில் தலை வைத்து படுத்தும் நுதன முறையில் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இதனால் தஞ்சை ரயில் நிலையமே ஸ்தம்பித்து போயுள்ளது.
|
தண்டவாளத்தில் சமைத்து போராட்டம்
இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான விவசாயிகள், வீட்டில் இருந்து வரும் போதே சமைத்து வைத்த உணவையும் வாழை இலையையும் கையில் கொண்டு வந்து தஞ்சை ரயில் நிலையத்திற்குள் நுழைந்தனர். பின்னர், தடைகளை மீறி விவசாயிகள் தண்டவாளத்தில் அமர்ந்து வீட்டில் இருந்து கொண்டு வந்த உணவை வாழை இலையில் பரிமாறி உண்டு போராட்டம் நடத்தினார்கள்.
பானை வைத்து அடுப்பு மூட்டி
மேலும், சுள்ளி, பானை ஆகியவற்றை கையில் கொண்டு வந்து, தண்டவாளத்திலேயே அடுப்பு மூட்டி சோறாக்கி உண்டு நுதன முறையில் விவசாயிகள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர் -கும்பகோணம் ரயிலை மறித்து 500 பேர் கைது
தண்டவாளத்தில் உணவு சமைத்து போராட்டம் நடத்தி வந்த விவசாயிகள், தஞ்சாவூர் -கும்பகோணம் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, 500க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
தண்டவாளத்தில் குடிசைப் போட்டு போராட்டம்
திருச்சி - கரூர் குடமுருத்தி ரயில் தண்டவாளத்தில் குடிசை போட்டு விவசாய சங்கத்தினர் நுதன போராட்டத்தை நடத்தி வருகின்றனர். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெறும் இந்தப் போராட்டத்தின் போது தண்டவாளத்தில் நாற்று நட்டும் விவசாயிகள் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
இந்தப் போராட்டத்தின் போது தஞ்சை - கரூர் ரயிலை மறித்து போராட்டம் விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள்.