காவிரி மேலாண்மை ஆணையம் குறித்து நாடாளுமன்றத்தில் மீண்டும் விவாதிக்க கூடாது: ஸ்டாலின்
சென்னை: காவிரி மேலாண்மை ஆணைய விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் மீண்டும் விவாதிக்கக் கூடாது என்று திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். காவிரி நீர் பிரச்சனை மற்றும் சேலம் 8 வழிச்சாலை குறித்து அவரிடம் கேட்கப்பட்டது.

காவிரி நீர் பிரச்சனை குறித்து கர்நாடக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியது. இது குறித்து ஸ்டாலினிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது,
அதிக அதிகாரம் இல்லாத ஒரு ஆணையத்தை அமைத்துள்ள போதிலும் அதை தவறு என்று கூறி கர்நாடக முதல்வர் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்கிறார். இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டிய அவசியமே இல்லை. அதனால் மத்திய அரசு அடிபணிந்துவிடக் கூடாது.
காலத்தை கடத்தவே கர்நாடகா இந்த நாடகத்தை நடத்துகிறது. அதனால் தமிழக அரசு உடனே அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி ஒரு நல்ல முடிவை எடுத்து மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என நான் ஏற்கனவே அறிக்கை வெளியிட்டுள்ளேன்.
இது குறித்து எங்கள் கட்சியின் எதிர்கட்சி துணை தலைவர் துரைமுருகன் சட்டசபையில் பேசியுள்ளார். அதற்கு பதில் அளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஆணைய கூட்டத்தில் என்ன முடிவு எடுக்கிறார்கள் என்பதை பார்த்து பிறகு கூட்டத்தை கூட்டலாம் என்றார் என ஸ்டாலின் தெரிவித்தார்.
சேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு மக்கள் விரும்பியே நிலத்தை அளிக்கிறார்கள் என்று முதல்வர் கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு ஸ்டாலின் கூறியதாவது,
அவதிக்குள்ளாகி போராடிக் கொண்டிருக்கிறார்களே, அந்த விவசாய பெருங்குடி மக்கள், பொதுமக்களை சந்தித்து இந்த வார்த்தையை கூறினார் என்றால் அவர் பேச்சை ஏற்றுக் கொள்கிறேன் என்றார்.
8 வழிச்சாலை திட்டம் மத்திய அரசின் திட்டம். இதை பிற கட்சிகள் பெரிதாக்கி மக்களை திசை திருப்புவதாக கூறப்படுகிறதே என்று ஸ்டாலினிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது,
மத்திய அரசு ஒரு திட்டத்தை கொண்டு வந்தாலும் அதை நிறைவேற்றுவது மாநில அரசின் கடமை. மாநில அரசு அடிமையாக இல்லாமல் தனது உரிமைகளை விட்டுக் கொடுக்காமல் குரல் கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications