காவிரி விவகாரம்: ஆக. 25-ல் தமிழகம் தழுவிய முழு அடைப்பு போராட்டத்துக்கு விவசாயிகள் அழைப்பு
சென்னை: காவிரி நீர் வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரி வரும் 25ம் தேதி மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்த தமிழக விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.
மேட்டூரில் இருந்து தண்ணீர் திறக்கப்படாததால் டெல்டா மாவட்ட விவசாயிகள் பெரும் சங்கடத்தை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் அனைத்து கட்சிகளின் விவசாயப் பிரிவுகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுகவை தவிர அனைத்து கட்சிகளும் கலந்து கொண்டன.

காவிரியில் தமிழகத்துக்கு உள்ள உரிமைகளை உறுதிசெய்யும் வகையில் காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்குமுறைக் குழு ஆகியவற்றை அமைக்க மத்திய அரசை வலியுறுத்தியும், அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும், விவசாய சங்கப் பிரதிநிதிகளை அழைத்துப் பேச வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தியும், காவிரி நீர் வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரியும் வரும் 25ம் தேதி மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்துவது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும் என்றும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் அதேநாளில் ரயில் மறியல் மற்றும் சாலை மறியல் போராட்டங்களும் நடத்தப்படும் என்று விவசாய சங்க தலைவர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications