மீத்தேன் வேண்டாம்.. நீரும் சோறும்தான் வேண்டும்-குஜராத் வாழ் தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் கோரி குஜராத் வாழ் தமிழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி குஜராத் வாழ் தமிழ் மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் காவிரி, மீத்தேன், ஸ்டெர்லைட் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை வலியுறுத்தி பல்வேறு இடங்களில், பல்வேறு அமைப்பினர் பல கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
காவிரி வாரியம் அமைக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் அதை அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகத்திலும் உள்ள அரசியல் கட்சியினரும், வெளிநாடு வாழ் தமிழர்களும் ஆர்ப்பாட்டம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில் தமிழக பிரச்சனைகளை களைய நடவடிக்கை எடுக்காத மோடி அரசை கண்டித்தும், உடனடியாக அப்பிரச்சனைகளுக்கெல்லாம் தீர்வு காண கோரியும் குஜராத்தில் வதோதரா பகுதி வாழ் தமிழ் மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏராளமானோர் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், 'நீரும் சோறும் வேண்டும், மீத்தேன் வேண்டாம்". சுவாசிக்க காற்று வேண்டும், நிலம் எரிய வாயு வேண்டாம்" போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை சிறுவர், சிறுமிகள் தங்கள் பிஞ்சுக் கைகளில் ஏந்தியிருந்தனர்.
"முறிக்காதே முறிக்காதே விவசாயிகளின் முதுகெலும்பை முறிக்காதே", "4-ஜியும் வேண்டாம், 5-ஜியும் வேண்டாம் தண்ணிதான் வேண்டும்", "காவிரி எங்கள் உரிமை, அதை மீட்டெடுப்பதே தமிழனின் கடமை" என்பன போன்ற முழக்கங்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்டன.