காவிரி பிரச்சினையில் பேச்சுவார்த்தை பலன் தராது.. கர்நாடக மேலவை எதிர்க்கட்சி தலைவர் மதுரையில் பேட்டி
மதுரை: கர்நாடக மேலவையின் எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான கே.எஸ்.ஈஸ்வரப்பா (பாஜக), மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்தார்.
தமிழகத்திற்கு எதிராக கர்நாடக எல்லையில் அம்மாநில அமைப்புகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், ஈஸ்வரப்பா மதுரை வந்திருந்ததால், அவருக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.
மீனாட்சி அம்மன் கோவில் வாசலில் ஈஸ்வரப்பாவை செய்தியாளர்கள் சூழ்ந்து கேள்வி கணைகளை வீச ஆரம்பித்தனர். குறிப்பாக காவிரி பற்றியே அதிக கேள்விகள் இருந்தன.
காவேரி நீர் பிரச்சனையில் இரு மாநில அரசுகளும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான கால சூழ்நிலை கடந்துவிட்டது. உச்சநீதிமன்றம் நிபுணர் குழு அமைத்து இரு மாநிலங்களுக்கும் குழுவை அனுப்பி தண்ணீர் தேவை குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.
கர்நாடகாவில் குடிக்கவே தண்ணீர் இல்லாத சூழ்நிலை உள்ளது. இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவு கர்நாடக மக்களுக்கு கடும் மன வேதனை அளித்துள்ளது. தமிழகத்தின் தண்ணீர் தேவை அடுத்த சம்பா சாகுபடிக்கு மட்டும்தான். ஆனால், கர்நாடகாவில் குடிக்கவே தண்ணீர் இல்லாத சூழ்நிலை நிலவுகிறது, இவ்வாறு தெரிவித்தார்.