மேலாண்மை ஆணையம் அமைத்து 48 மணி நேரத்திற்குள் அரசிதழில் வெளியிட வேண்டும்: ஜி.கே.வாசன்
காவிரி மேலாண்மை ஆணையம் உடனடியாக அரசிதழில் வெளியிட வேண்டும் என ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
ஈரோடு: காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்து 48 மணி நேரத்திற்குள் அரசிதழில் வெளியிட வேண்டும் என்று ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
ஈரோட்டில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் நேற்று பங்கேற்பதற்காக வந்திருந்த த.மா.க தலைவர் ஜி.கே.வாசன் முன்னதாக செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
காவிரிக்காக 50 ஆண்டுகளாக போராடி வருகிறோம். இதில் அதிகம் பாதிக்கப்பட்டது தமிழகம்தான். மேலும் தற்போது நீதி கிடைத்துள்ளதால் உடனடியாக காவிரி நதிநீர் ஆணையத்தை அமைத்து அதனை 48 மணிநேரத்தில் அரசிதழில் வெளியிட வேண்டும்.
ஜூன்12-ல் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறப்பை மத்திய மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும். கர்நாடகாவில் பதவி ஏற்கும் புதிய அரசு, சட்டத்தை பாதுகாப்பேன் என்ற உறுதியை எடுக்க வேண்டும்.
ஆளுநர்கள் நடுநிலையோடு செயல்பட வேண்டுமே தவிர தாங்கள் சார்ந்துள்ள இயக்கத்திற்கு ஆதரவாக செயல்பட கூடாது. இதேபோல் பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் அனைத்து துறைகளையும் பாதித்துள்ளதால் அதனை ஜி.எஸ்.டி வரிவரம்பிற்குள் கொண்டு வரவேண்டும். குட்கா ஊழலில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளதால் சி.பி.ஐ உடனடி நடவடிக்கை எடுத்து உண்மை நிலையை வெளிப்படுத்த வேண்டும். மேலும் தேர்தல் வரும்போது கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும். கூட்டுறவு தேர்தல் முறையாக நடைபெறவில்லை.
இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்தார்.