காவிரியில் அரசியலை ஆரம்பித்து விட்டது கர்நாடகா.. என்ன செய்யப்போகிறது தமிழக அரசும், பாஜகவும்?
Recommended Video

சென்னை: காத்திருந்து, காந்திருந்து கடைசியில் நேற்று காவிரி வழக்கில் தீர்ப்பு வெளியானது. ஆனால் அதிலும் தமிழகத்திற்கான நீரில் அளவு குறைந்துவிட்டது.
ஆண்டுக்கு 192 டிஎம்சிக்கு பதிலாக, 177.25 டிஎம்சி தண்ணீரை பிலிகுண்டுலு அளவாக தமிழகத்திற்கு திறந்துவிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆனால் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று கூறியதும், நதிகள் எந்த மாநிலத்திற்கும் சொந்தமானது இல்லை என கூறியதுமே ஒரே ஆறுதல்.

ஆரம்பித்துவிட்டது கர்நாடகா
இந்த நிலையில், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவிடமாட்டோம் என போர்க்கொடி உயர்த்தியுள்ளார் சித்தராமையா. நாடாளுமன்றம்தான் இதை தீர்மானிக்க வேண்டும் என்பதால் மத்திய அரசிடம் லாபி செய்து, இதை தடுத்துவிட கர்நாடக அரசும், கர்நாடக பாஜகவும் முழு வீச்சில் களமிறங்கிவிட்டன. ஆனால், தமிழகம் இன்னும் விழிக்கவில்லை.

இதுதான் சான்ஸ்
இந்த சந்தர்ப்பத்தை விட்டால், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது என்பது இயலாத காரியமாகிவிடும். ஏனெனில், இப்போது கொடுத்த தீர்ப்பு 15 வருடத்திற்கானது. அதுவரை மேல்முறையீடு செய்ய முடியாது. மறு ஆய்வு மனு வேண்டுமானால் போடலாம். எனவே உச்சநீதிமன்றம் கூறியதை ஆதாரமாக கொண்டு மத்திய அரசுக்கு உடனடியாக தமிழக அரசு அழுத்தம் கொடுத்து, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும்.

அரசியல் விளையாட்டு ஆரம்பம்
ஆனால், நியாயப்படி இப்படித்தான் நடக்க வேண்டும் என்று பார்த்தாலும், யதார்த்தத்தில், அப்படி நடக்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. காரணம், கர்நாடக தேர்தல். அங்கே பாஜக ஆட்சியை பிடிக்கும் அளவுக்கு வளர்ந்துள்ள கட்சி. தமிழகத்தில் நோட்டாவுடன் போட்டி போடும் கட்சி. எனவே, கர்நாடகாவை பகைத்துக்கொள்ள பாஜக விரும்பாது. இங்குதான் கர்நாடகாவின் அரசியல் 'சித்து' விளையாட்டுகள் ஆரம்பிக்கும். இதை தடுக்க தமிழக பாஜகவும் அரசியல் ஆயுதத்தைதான் கையில் எடுக்க வேண்டும்.

தீர்ப்பு இருக்குதே
தமிழகத்தில் பாஜகவுக்கு மக்கள் மத்தியில் நல்ல அபிப்ராயம் கிடைக்க வேண்டுமானால், காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைத்தே தீர வேண்டும் என்று நெருக்கடியை கொடுத்தாக வேண்டும். உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை காரணம் காண்பித்து ஹஜ் மானியத்தை நிறுத்திய மத்திய அரசு, காவிரி மேலாண்மை வாரியத்தையும் அதே அடிப்படையில் அமைக்க வேண்டும் என்பதை தமிழக பாஜக தலைவர்கள் வலியுறுத்த வேண்டும்.

ராஜினாமா செய்துவிடலாம்
இந்த சட்டத்திற்கு உட்பட்ட ஒரு நடவடிக்கையை கூட மத்திய அரசு எடுக்காவிட்டால், தமிழக பாஜகவினர் மொத்தமாக கட்சி பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு சொந்த ஊர்களுக்கு சென்று செட்டில் ஆகிவிடலாம். ஏனெனில், இதையும் செய்ய முடியாவிட்டால் தமிழகத்தில் பாஜக என்ற ஒரு கட்சி ஏன் இருக்கிறது என்ற கேள்வி அனைவரது உள்ளத்திலும் வந்து, அந்த கேள்வி கணைகள் பாஜக தலைவர்களை துரத்தி அவமானப்படுத்திவிடும். எனவே இரண்டில் ஒன்றை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் தமிழக பாஜகவினர்.












Click it and Unblock the Notifications