ராமஜெயம் வழக்கு: ஜூலை 24க்குள் கொலையாளியை கண்டுபிடிக்க வேண்டும் - ஹைகோர்ட் கெடு
மதுரை: ராமஜெயம் கொலை வழக்கில் குற்றவாளியை கண்டுபிடிக்க சிபிசிஐடி போலீசுக்கு ஜூலை 24ம் தேதி வரை கெடு விதித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம், கடந்த 2012ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபயிற்சிக்கு சென்ற போது திருச்சி காவிரிக் கரையோரத்தில் மர்ம நபர்களால் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். உடனடியாக மாநகராட்சி காவல்துறை ஆணையர் சைலேஷ்குமார் யாதவ், உதவி ஆணையர் ஜெயச்சந்திரன் தலைமையில் 8 க்கும் மேற்பட்ட தனிப்படை அமைத்து விசாரணையை துவக்கினர்.

சி.பி.சி.ஐ.டி போலீஸ்
ராமஜெயம் கொலை வழக்கில் 90 நாட்கள் ஆகியும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால் வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டது. அதன்பிறகு சி.பி.சி.ஐ.டி உதவி ஆணையர் மலைச்சாமி தலைமையில் 12 க்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள் அடங்கிய படை களத்தில் இறங்கி மீண்டும் சாட்சிகளை விசாரிக்கத் துவங்கியது.
செல்போன் அழைப்புகள்
கொலை நடப்பதற்கு முன் ராமஜெயத்துக்கு வந்த போன் அழைப்புகள், அவர் தொடர்பு கொண்ட நபர்கள், கொலை நிகழ்ந்த அன்று நள்ளிரவில் இருந்து காலை வரை திருச்சி மாநகரில் தொடர்பில் இருந்த 4,000 செல்போன் இணைப்புகள் ஆகியவற்றை விசாரித்தனர். ஆனாலும் உருப்படியாக எதுவும் சிக்கவில்லை. குற்றவாளி யார் என்பதை நெருங்கக் கூட இல்லை.
அக்கறை காட்டாத போலீஸ்
இந்த கொலை வழக்கில் ஆரம்பம் முதலே போலீஸார் அதீத அக்கறை காட்டவில்லை மிகவும் மந்தமாகவே இருந்தனர். இந்த வழக்கில் இதற்கு முன் சி.பி.சி.ஐ.டி., எஸ்.பியாக இருந்த, ராஜேஸ்வரி, திருச்சிக்கே எஸ்பி ஆனார். அவருக்கு பதில் தஞ்சை மாவட்ட எஸ்.பி., அன்பு, சி.பி.சி.ஐ.டி., எஸ்.பி.,யாக நியமனம் செய்யப்பட்டார். ஆனாலும் இதுவரை எதுவும் கண்டுபிடிக்கவில்லை.
தாண்டாத விசாரணை
நேருவின் குடும்பத்தார், ராமஜெயம் மனைவி,பிள்ளைகளை தாண்டி அவ்வளவாக அதிகமாக சிபிசிஐடி போலீஸார் விசாரணையை துவக்கவில்லை. கூடவே கடந்த சிலமாதங்களாக மீண்டும் புதிய விசாரணையை துவக்கி ஆரம்பத்தில் இருந்து விசாரணை நடத்தினாலும் துப்பு ஏதும் கிடைக்கவில்லை.
மனைவி லதா மனு
இந்த விசாரணையில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில், ராமஜெயம் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக்கோரி, அவருடைய மனைவி லதா, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு கடந்த மார்ச் 10ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, குற்றவாளிகளை கண்டுபிடிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு 3 மாதம் காலஅவகாசம் வழங்கப்பட்டது.
அவகாசம் தர மறுப்பு
இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதி எஸ்.நாகமுத்து முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.சி.ஐ.டி. விசாரணை அறிக்கையை மூடி முத்திரையிட்ட கவரில் அரசு வழக்கறிஞர் மயில்வாகனராஜேந்திரன் வழங்கினார். தொடர்ந்து அவர் வாதாடியபோது, ‘குற்றவாளிகளை கண்டுபிடிக்க மேலும் 2 மாதம் அவகாசம் தர வேண்டும்‘ என கேட்டுக்கொண்டார். அவரது கோரிக்கையை நீதிபதி ஏற்க மறுத்துவிட்டார்.
ஏன் கண்டுபிடிக்கவில்லை
ராமஜெயம் கொலை செய்யப்பட்டு 3 ஆண்டாகியும் இதுவரை யாரையும் ஏன் கைது செய்யவில்லை. யார் குற்றவாளி என்பதைக் கூட முடிவு செய்யவும் இல்லை. ஆனால், நீதிமன்ற விசாரணையின்போது ஒவ்வொரு முறையும் கொலை தொடர்பாக முக்கிய தகவல் கிடைத்துள்ளது என தவறாமல் அறிக்கை மட்டும் தாக்கல் செய்கிறீர்கள்.
அறிவியல் பூர்வமான விசாரணை
அறிவியல்பூர்வமாக விசாரணை நடத்தினால் தான் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியும். இந்த வழக்கில் தற்போது தடயங்கள் அழிக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளது. சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணை சரியாக நடைபெறவில்லை. மேலும் அவகாசம் அளிப்பது பலன் அளிக்காது.
சி.பி.ஐ. விசாரணை
வழக்கில் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை. இந்த காரணங்களுக்காக இந்த வழக்கை ஏன் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக் கூடாது'' என பல்வேறு கேள்விகளை எழுப்பினார். மேலும் இந்த வழக்கு குறித்து வெள்ளிக்கிழமை பதிலளிக்க சி.பி.சி.ஐ.டி போலீஸாருக்கு உத்தரவிட்டார் நீதிபதி.
ஜூலை 24ல் அறிக்கை
இதனிடையே சிபிசிஐடி எஸ்.பி அன்பு இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார்.குற்றவாளி பற்றிய முக்கிய துப்பு கிடைத்து உள்ளதால் அவகாசம் தேவை என அரசு தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து, ஜூலை 24ம் தேதிக்குள் குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என சி.பி.சி.ஐ.டி.க்கு உத்தரவிட்ட நீதிபதி, அன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜராகி அறிக்கையும் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications