3 மாணவிகள் மரணம்... சூடு பிடிக்கும் சிபிசிஐடி விசாரணை... உண்மைகள் வெளி வருமா?
விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாணவிகள் மரணம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே இயங்கிவரும் எஸ்.வி.எஸ். இயற்கை மற்றும் யோகா சித்த மருத்துவ கல்லூரியில் படித்து வந்த மாணவிகள் மோனிஷா, சரண்யா, பிரியங்கா ஆகியோர் கடந்த 23-ந் தேதி கல்லூரியின் அருகில் உள்ள விவசாய கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டனர்.
அவர்கள் கொலை செய்யப்பட்டதாக பெற்றோர்கள் புகார் கூறினார்கள். கல்லூரி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க கோரி பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து கல்லூரி தலைவர் சுப்பிரமணியன், தாளாளர் வாசுகி, அவர்களுடைய மகன் சுவாக்கர் வர்மா, கல்லூரி முதல்வர் கலாநிதி மற்றும் கல்லூரி ஆதரவாளர் வெங்கடேசன் ஆகிய 5 பேர் மீது சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக சுவாக்கர் வர்மா, முதல்வர் கலாநிதி ஆகிய 2 பேரும் கைது செய்யப்பட்டனர். கல்லூரி தாளாளர் வாசுகி தாம்பரம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.
வாசுகியை போலீசார் கள்ளக்குறிச்சி நடுவர் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட்டு தமிழ்ச்செல்வி முன்னிலையில் ஆஜர்படுத்தினர். இரண்டாம் முறையாக வாசுகி கள்ளக்குறிச்சி நடுவர் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட்டு தமிழ்ச்செல்வி முன்னிலையில் ஆஜர் படுத்தப் பட்டார். அப்போது அவர் சின்னசேலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்திவேல் குறித்து குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். மேலும் இன்ஸ்பெக்டர் சக்திவேலுக்கும், எனக்கும் நிலப்பிரச்சினை காரணமாக முன்விரோதம் உள்ளது. இதனால் அவர் என்னை பழிவாங்க நினைக்கிறார். இந்த வழக்கை அவர் விசாரித்தால் உண்மை குற்றவாளிகள் தெரியாமல் போய்விடுவார்கள்.
இந்த வழக்கு விசாரணை அதிகாரியாக வேறு போலீஸ் இன்ஸ்பெக்டரை நியமித்தால் விசாரணைக்கு ஒத்துழைப்பு தருகிறேன். மேலும் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்றார்.
இந்நிலையில் வாசுகியை 10 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி கேட்டு இன்ஸ்பெக்டர் சக்திவேல் கள்ளக்குறிச்சி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு தமிழ்ச்செல்வி, வாசுகியை போலீசார் 7 நாட்கள் காவலில் வைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். விசாரணை அதிகாரிகளாக கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு மதிவாணன், சின்னசேலம் இன்ஸ்பெக்டர் சக்திவேல், கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமமாலினி ஆகிய 3 பேரை நியமித்தார். மேலும் வருகிற 4-ந் தேதி மீண்டும் வாசுகியை கள்ளக்குறிச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
இதைத்தொடர்ந்து, போலீசார் வாசுகியை கள்ளக்குறிச்சியில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு அவரிடம் விசாரணை நடத்த திட்டமிட்டனர்.
இந்த நிலையில், மாணவிகள் மோனிஷா, சரண்யா, பிரியங்கா ஆகியோர் இறந்த சம்பவம் பற்றி சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்த டி.ஜி.பி. அசோக்குமார் உத்தரவிட்டார். எனவே, வாசுகியிடம் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தவில்லை. கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் போலீஸ் பாதுகாப்புடன் வாசுகி இரவு முழுவதும் வைக்கப்பட்டு இருந்தார்.
சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு நாகஜோதி நேற்று காலை 9.20 மணிக்கு சென்னையில் இருந்து விழுப்புரம் வந்தார். வண்டிமேடு பூப்பால வீதியில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்துக்கு சென்றார். மாணவிகள் இறந்தது தொடர்பாக விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஏசுபாதத்திடம் ஆலோசனை நடத்தினார்.
சின்ன சேலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்துக்கு வந்தனர். 3 மாணவிகள் இறப்பு தொடர்பான வழக்கு ஆவணங்களை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டிடம் ஒப்படைத்தார்கள்.
இதையடுத்து சின்ன சேலம் அருகே மாணவிகள் படித்த சித்த மருத்துவ கல்லூரிக்கு சி.பி.சி.ஐ.டி போலீஸ் அதிகாரிகள் சென்றனர். பின்னர் மாணவிகள் இறந்து கிடந்த கிணற்றை பார்வையிட்டனர். பல்வேறு தரப்பினரிடமும் விசாரணை தொடங்கியுள்ளனர்.
மேலும் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை காவலில் எடுத்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். இவ்வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு நாகஜோதியின் விசாரணை தீவீரமடைந்துள்ளதால் வழக்கில் சம்மந்தப்பட்டவர்கள் பலர் கலக்கத்தில் உள்ளனர். மேலும் ஏராளமானவர்களிடம் விசாரணை நடத்தவும் அவர் திட்டமிட்டுள்ளதால் வழக்கின் வேகம் சூடு பிடித்துள்ளது.
மொத்தத்தில் தேர்தலுக்குமுன் மாணவிகளின் மரணம் குறித்து அவரது விசாரணை பல உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டுவரும் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications