3 மாணவிகள் படுகொலை: தொடரும் மர்மங்கள்- தாளாளர் வாசுகியிடம் சம்பவ நாளில் 5 முறை பேசிய அந்த நபர் யார்?
விழுப்புரம்: கள்ளக்குறிச்சி 3 மாணவிகள் படுகொலை விவகாரத்தில் அவிழ்க்கப்படாத மர்ம முடிச்சுகள் நீள்கின்றன. சர்ச்சைக்குரிய எஸ்விஎஸ் கல்லூரி தாளாளர் வாசுகியிடம் சம்பவ நாளன்று 5 முறை பேசிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
விழுப்புரம் அருகே பங்காரம் எஸ்.வி.எஸ். இயற்கை மருத்துவ கல்லூரி மாணவிகள் மோனிஷா, சரண்யா, பிரியங்கா கடந்த 23-ந் தேதி மர்மமான முறையில் கிணற்றில் இறந்து கிடந்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி தாளாளர் மகன் சுவாக்கர் வர்மா, கல்லூரி முதல்வர் கலாநிதி ஆகியோரை கைது செய்தனர். கல்லூரி தாளாளர் வாசுகி சென்னை தாம்பரம் நீதிமன்றத்திலும், அவருக்கு உதவியாக இருந்த கூலிப்படையை சேர்ந்தவரான வெங்கடேசன் சைதாப்பேட்டை நீதிமன்றத்திலும் சரணடைந்தனர்.
இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து வாசுகி, வெங்கடேசன், சுவாக்கர் வர்மா, கலாநிதி ஆகியோரை காவலில் எடுத்து சிபிசிஐடி போலீசார் விசாரித்தனர்.
அப்போது கல்லூரி தாளாளர் வாசுகி, தனது காரில் முக்கிய ஆவணங்கள் உள்ளதாக கூறியிருக்கிறார். பின்னர் சிபிசிஐடி போலீசார் கள்ளக்குறிச்சியில் உள்ள வாசுகியின் வீட்டுக்கு சென்றனர். அங்கு நிறுத்தப்பட்டிருந்த காரின் சாவி இல்லாததால் அதன் கண்ணாடியை உடைத்து போலீசார் சோதனை நடத்தினர்.
அந்த காரில் 3 செல்போன்கள் மற்றும் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. 3 மாணவிகள் உயிரிழந்த சம்பவத்தன்று வாசுகியின் ஒரு செல்போனில் ஒரு நபர் 5 முறை பேசியிருக்கிறார். அந்த மர்ம நபர் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications