நிர்மலா தேவியை விசாரிக்க சிபிசிஐடி முடிவு.. சாத்தூர் நீதிமன்றத்தில் மனு.. பல உண்மைகள் வெளிவரலாம்
விருதுநகர்: பேராசிரியை நிர்மலா தேவியை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி மனு தாக்கல் செய்துள்ளது.
மாணவிகளை தவறான வழிக்கு கொண்டு செல்ல திட்டமிட்டு, புரோக்கர் போல செயல்பட்டதாக அருப்புக்கோட்டையை சேர்ந்த பேராசிரியை நிர்மலா தேவி மீது குற்றச்சாட்டு எழுந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வழக்கில் நிர்மலா தேவியை கைது செய்ய போலீசார் முயன்றபோது அவர் வீட்டை பூட்டிக்கொண்டு உள்ளேயே இருந்து கொண்ட நிலையில், 7 மணி நேர போராட்டத்திற்கு பிறகு, வீட்டு கதவை உடைத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிர்மலா தேவிக்கு வரும் 28ம் தேதிவரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான், இவ்வழக்கு, சட்டம்-ஒழுங்கு காவல்துறையில் இருந்து, சிபிசிஐடிக்கு மாற்றப்படுவதாக அரசு அறிவித்தது. இதையடுத்து வழக்கில் வேகம் பிடித்துள்ளது.
சிறையிலுள்ள நிர்மலா தேவியிடம் விசாரணை நடத்த அனுமதிக்குமாறு சாத்தூர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி இன்று மனு தாக்கல் செய்துள்ளது. நாளை நீதிமன்றம் விசாரிக்கிறது. இதற்கு நீதிமன்றம் ஒப்புதல் அளித்தால், நிர்மலா தேவியிடம் சிபிசிஐடி துருவி துருவி விசாரணை நடத்தி பல உண்மைகளை வெளிக்கொண்டுவர வாய்ப்பு ஏற்படும்.
சட்டம்-ஒழுங்கு காவல்துறையை காட்டிலும், சிபிசிஐடிக்கு விசாரணை அதிகாரம் அதிகம் என்பதால், இவ்வழக்கு சிபிசிஐடிக்கு கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.