உடுமலைப்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் பெண் பலாத்காரம்.. எஸ்.ஐ. உட்பட 3 போலீசாரை கைது செய்தது சி.பி.ஐ.!!
திருப்பூர்: உடுமலைப்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் சந்திரா என்ற பெண் கடந்த ஆண்டு பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் எஸ்.ஐ. விஜயகுமார் உட்பட 3 போலீசாரை சி.பி.ஐ. அதிரடியாக நேற்று இரவு கைது செய்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் தனியார் உணவகத்தில் சமையல் உதவியாளராக பணிபுரிந்து வந்தவர் சந்திரா. அவரது வீட்டின் உரிமையாளர் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டார்.

இதற்காக கடந்த ஆண்டு ஆகஸ்ட் 11-ந் தேதி அவர் உடுமலைப்பேட்டை போலீஸ் ஸ்டேஷனுக்கு போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு சில போலீசாரால் மிகக் கொடூரமாக சந்திரா சித்ரவதை செய்யப்பட்டு மிக மோசமான முறையில் பலாத்காரம் செய்யப்பட்டார்.
இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த சந்திராவின் மகள் ராஜகுமாரி, இச்சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரிக்க கோரிக்கை விடுத்திருந்தார். இதை ஏற்று சென்னை உயர்நீதிமன்றம் சந்திரா வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டார்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்த வழக்கை சி.பி.ஐ. கையில் எடுத்தது. ஆனால் ஓராண்டாகியும் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படாமலேயே இருந்து வந்தது.
அண்மையில் விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு குறித்து சட்டசபையில் அறிக்கை தாக்கல் செய்த முதல்வர் ஜெயலலிதாவும், ஓராண்டாகியும் உடுமலைப்பேட்டை சந்திரா வழக்கில் சி.பி.ஐ. நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்நிலையில் சி.பி.ஐ. போலீசார் நேற்று 10 போலீஸ் அதிகாரிகளிடம் துருவித் துருவி விசாரணை நடத்தினர். இதன் பின்னர் சப் இன்ஸ்பெக்டர் விஜயகுமார், கான்ஸ்டபிள்கள் திலக்குமார், ரங்கநாயகம் ஆகியோரை நேற்று இரவு சி.பி.ஐ. சிறப்பு கிரைம் பிராஞ்ச் போலீசார் கைது செய்தனர். இன்று இந்த மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.












Click it and Unblock the Notifications