முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கு: வேளாண் தலைமைப் பொறியாளர் ஜாமீன் கோருகிறார்
நெல்லை: வேளாண் உதவி செயற் பொறியாளர் முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தலைமைப் பொறியாளர் செந்தில் ஜாமீன் கோரி நெல்லை கோர்ட்டில் மனு செய்துள்ளார். அவரது மனு நாளை விசாரணைக்கு வருகிறது.
திருநெல்வேலியில் வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் முத்துக்குமாரசாமி (57) ரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இவ்வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்மூர்த்தி, தலைமைப் பொறியாளர் மு.செந்தில் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் மு.செந்தில் சார்பில் ஜாமீன் கேட்டு, திருநெல்வேலி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் திங்கள்கிழமை மனு செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், வேளாண்மை துறையின் மிகவும் மதிப்பு மிக்க பொறுப்பில், நேர்மையுடன் பணியாற்றி வரும் எனக்கும், இந்த வழக்குக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது.
எனக்கு ஆஸ்துமா, ரத்த அழுத்தம், இதய நோய்கள் உள்ளன. இவற்றை பரிசீலித்து எனக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன் என பொறியாளர் செந்தில் கோரியுள்ளார். இந்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது.












Click it and Unblock the Notifications