தமிழகத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்ய மத்திய குழு சென்னை வந்தடைந்தது
சென்னை: தமிழகத்தில் மழை, வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட 7 பேர் கொண்ட மத்திய குழுவினர் சென்னை வந்தடைந்தனர்.
தமிழகத்தில் கடந்த மாதம் கொட்டித் தீர்த்த வடகிழக்குப் பருவமழையால் தமிழகத்தின் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், உள்ளிட்ட வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தின் சில பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய மத்திய உள்துறை இணைச்செயலாளர் டி.வி.எஸ்.என்.பிரசாத் தலைமையில் 9 பேர் கொண்ட குழுவினை மத்திய அரசு அமைத்தது. இந்த குழு தமிழகத்தின் சென்னை, காஞ்சிபுரம், கடலூர் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் நவம்பர் மாதம் ஆய்வு மேற்கொண்டது.
இந்நிலையில், தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஏற்பட்டுள்ள சேதங்களை பார்வையிட மத்திய குழு இன்று மீண்டும் சென்னை வந்துள்ளது. மத்திய உள்துறை இணைச் செயலாளர் பிரசாத் தலைமையிலான குழுவினர் வந்துள்ளனர்.
மீனா, சுமித் கோயல், தொஹ்ர உள்ளிட்ட 7 பேர் கொண்ட குழுவினர் சென்னை வந்துள்ளனர். இந்த குழுவினர் சென்னையில் மயிலாப்பூர், கோட்டூர்புரம், ஜாபர்கான் பேட்டை, விருகம்பாக்கம் உள்ளிட்ட இடங்களை பார்வையிட உள்ளனர். மத்திய குழுவில் இடம்பெற்றுள்ள ஜர்கார் முன்னதாக சென்னை வந்து சேர்ந்தார்.