சென்னை மழை வெள்ள பாதிப்பு பகுதிகள் - மீண்டும் ஆய்வு செய்தது மத்தியக் குழு
சென்னை: சென்னையில் கடந்த மாதம் பெய்த மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை மீண்டும் ஆய்வு செய்ய மத்தியக் குழு வருகை புரிந்து பார்வையிட்டது.
கடந்த நவம்பர் மாதம் தொடங்கி பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தினால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய மாவட்டங்கள் பேரழிவை சந்தித்தன. வெள்ள பாதிப்பு பகுதிகளை பார்வையிடுவதற்காக மத்திய உள்துறை இணைச்செயலாளர் டி.வி.எஸ்.என் பிரசாத் தலைமையில் அமைக்கப்பட்ட மத்திய குழு பார்வையிட்டது.

அதன் பிறகு டிசம்பர் மாத துவக்கத்தில் பெருமழை பெய்ததால் சென்னையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஏராளமான வீடுகள் மூழ்கின. காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன.
அதன் பின்னர் பெருவெள்ள நிவாரண மற்றும் சீரமைப்பு பணிகளுக்காக மொத்தம் 25,912.45 கோடி ரூபாய் விடுவிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை வைத்தது. இந்நிலையில், வெள்ளம் பாதித்த பகுதிகளை மீண்டும் பார்வையிடுவதற்காக டி.வி.எஸ்.என்.பிரசாத் தலைமையிலான மத்திய குழு நேற்று இரவு சென்னை வந்தது. இன்று ஜெயலலிதாவை சந்தித்து ஆலோசனை நடத்திய இக்குழு சென்னையில் தனது ஆய்வினை தொடங்கியது.
தலைநகர் சென்னையில் சைதாப்பேட்டை, கோட்டூர்புரம், ஜாபர்கான்பேட்டை, வளசரவாக்கம், விருகம்பாக்கம் ஆகிய பகுதிகளில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பினை நேரில் ஆய்வு செய்த இக்குழு, இதுபற்றி மத்திய அரசிடம் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications