இந்த அடிப்படையில்தான் சச்சினுக்கு பாரதரத்னா விருது கொடுத்ததாம் மத்திய அரசு...!
சென்னை: சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கியது குறித்து மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கத்தைப் பதிவு செய்துள்ளது. இதைத் தொடர்ந்து வழக்கை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
கனகசபை என்ற வழக்கறிஞர் சென்னை உயர்நீதி்மன்றத்தில் ஒரு பொது நலன் மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அதில், கடந்த 1954ம் ஆண்டு குடியரசுத் தலைவரின் அறிவிக்கையின்படி பாரத ரத்னா விருது நிர்மானிக்கப்பட்டது. விருதுக்கான விதிமுறைகள், சட்ட விதியின்படி இந்த விருதானது கலை, இலக்கியம், பொதுப் பணி ஆகியவற்றில் தலை சிறந்து விளங்குபவருக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும்.

ஆனால் கடந்த 2011ம் ஆண்டு இந்த விருதுக்குரிய தகுதி விதிமுரையில் மத்திய அரசு மாற்றம் செய்வதாக தகவல்கள் வெளியானது. இது பத்திரிகைகளிலும் வெளியானது. பின்னர் 2011, டிசம்பர் 16ம் தேதி இதுதொடர்பான அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டது.
அதன் பின்னர் 2013, நவம்பர் 16ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங், பாரத ரத்னா விருதை கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கும், விஞ்ஞானி சி.என்.ஆர். ராவுக்கும் வழங்குவதாக அறிவிப்பு வெளியிட்டார். இது ஒரு பத்திரிக்கை குறிப்பு மூலமாக அறிவிக்கப்பட்டது.
மேலும் இருவரையும் பாராட்டி பிரதமர் இன்னொரு செய்திக்குறிப்பை வெளியிட்டார்.
இந்த அறிவிப்பானது, பாரத ரத்னா விருது தொடர்பான குடியரசுத் தலைவரின் அறிவிக்கை விதி 1-55ன் 8வது பத்திக்கு முற்றிலும் புறம்பானதாக இருக்கிறது.
பாரதரத்னா விருது பெறுவதற்கான எந்த ஒரு தகுதியும் சச்சின் டெண்டுல்கருக்கு இல்லை. அவர் கலை, இலக்கியம், அறிவியல், பொதுப்பணி என எந்தத் துறையையும் சாராதவர்.
எனவே இந்த விருது அறிவிக்கப்பட்டது செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை தலைமை நீதிபதி ராஜேஷ் குமார் அகர்வால், நீதிபதி ரவிச்சந்திர பாபு ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இன்று விசாரித்தது. அப்போது அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் வில்சன் ஆஜராகி ஒரு விளக்கத்தை சமர்ப்பித்தார். அதில், இந்தியக் குடியரசுத் தலைவர் 16-11-2011 அன்று வெளியிட்ட அறிவிக்கையில், கலை, இலக்கியம், அறிவியல் மட்டுமல்லாமல் பிற துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கும் பாரத ரத்னா விருது வழங்கலாம் என்று கூறியுள்ளார். இதன் அடிப்படையில்தான் சச்சின் தெண்டுல்கர் பாரத ரத்னா விருதுக்கு அறிவிக்கப்பட்டுள்ளார் என்று கூப்பட்டுள்ளது.
இதையடுத்து விசாரணையை நாளைக்கு நீதிபதிகள் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications