ராஜபக்சேவுக்கு பாரத ரத்னா என பிதற்றும் சு.சாமி மீது நடவடிக்கை எடுங்கள்: தா. பாண்டியன்
சென்னை: ராஜபக்சேவுக்கு பாரத ரத்னா விருது வழங்கக் கோரிய பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி மீது இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான டாக்டர்.சுப்பிரமணியசாமி, இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு பாரத ரத்னா விருது அளிக்க வேண்டும் என வேண்டியிருப்பது, அவரது நெடுங்கால, நிலைத்த தமிழ் மக்களுக்கு எதிரான வெறுப்பைக் காட்டுகிறது.

தமிழ் மக்களைக் கொன்று குவித்த குற்றத்திற்காக போர் விதி மீறல்களை மீறிய-மனித உரிமைகளை நசுக்கிய காரணங்களுக்காக போர்க் குற்றவாளி என விசாரிக்கப்பட வேண்டிய கொலைப்பழி சுமத்தப்பட்டுள்ளவருக்கு பாரத ரத்னா பட்டம் வழங்கக் கேட்பது, இதுவரை பாரத ரத்னா பட்டம் பெற்ற அனைவரையும் இழிவுபடுத்துவதாக ஆகும்.
இலங்கை வாழ் தமிழ் மக்களின் மனித வாழ்வுரிமைகளைப் பறிக்கவும், இனத்தையும் கொன்றழிக்கத் தூண்டும் குற்றத்திற்காக இந்திய அரசு இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஈழத்தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுத்து வரும் சகோதரர் வை.கோ.வும், பா.ம.க தலைவர் ராமதாசும், இந்தப் பிதற்றல்களைக் கேட்ட பிறகும் பா.ஜ.க.வுடன் உறவு பற்றிப் பேசுவதை நிறுத்தி, ஈழத்தமிழ் மக்களின், இந்தியத் தமிழக மீனவர்கட்கும் அடிப்படை வாழ்வுரிமைகளைப் பெற்றுத்தர தமிழ் எதிரிக் கூட்டத்திலிருந்து விலகி, தமிழ் மக்களைத் திரட்ட முன்வர இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வேண்டுகிறோம் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
பெரியார் தி.க.:
ராஜபக்சேவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்த பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமிக்கு பெரியார் திராவிடர் கழக தலைவர் கு. ராமகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், ராஜபக்சேவுக்கு விருது வழங்க தமிழ் மக்கள் அனுமதிக்கவே மாட்டார்கள். அப்படி இருக்கையில் விருது வழங்கக் கோரிய சுப்பிரமணிய சாமியையும், அவர் இருக்கும் பாஜகவையும் தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்றார்.












Click it and Unblock the Notifications