அச்சுறுத்தும் டெங்கு... தமிழகத்தில் முகாமிட்டு ஆய்வு நடத்தும் மத்திய குழு
தமிழகத்தில் டெங்கு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய குழு சென்னை வந்துள்ளது.
Recommended Video

சென்னை : தமிழகத்தில் டெங்கு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய மத்தியக் குழுவைச் சேர்ந்த 5 பேர் சென்னை வந்துள்ளனர். சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் இந்தக் குழு மாவட்டங்களில் ஆய்வு நடத்த உள்ளது.
தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு சவால் விடுக்கும் வகையில் உயிர்க்கொல்லி நோயாக டெங்கு காய்ச்சல் பல்கிப் பெருகி வருகிறது. நாள்தோறும் 5 பேராவது டெங்குவிற்கு பலியாவது தொடர்கதையாகி வருகிறது. டெங்குவை கட்டுப்படுத்துவதற்கான விழிப்புணர்வு முயற்சிகளில் அரசுடன் இணைந்து அரசியல் கட்சிகள், தொண்டு நிறுவனங்களும் களத்தில் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில் டெங்கு பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் டெங்கு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய பூச்சியியல் வல்லுநர்கள் மற்றும் நோய் பரவாமல் தடுக்கும் சிகிச்சை நிபுணர்கள், மருத்துவர் அஷுதோஷ் பிஸ்வாஸ், மருத்துவர் வினய் கார்கே உள்பட 5 பேர் சென்னை வந்துள்ளனர்.
இவர்கள் தேனாம்பேட்டையில் உள்ள பொது சுகாதாரத்துறை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினர். இதில் டெங்குவை கட்டுப்படுத்த அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து மத்திய குழுவினர் கேட்டறிந்தனர். மேலும் டெங்கு கொசுவை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மத்திய குழுவினர் தமிழக அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து மத்திய குழு டெங்கு பாதித்த இடங்களை ஆய்வு செய்ய உள்ளது. மத்தியக் குழுவினர் 2 பிரிவாக பிரிந்து ஒரு குழு செங்கல்பட்டிலும், மற்றொரு குழு சேலத்திலும் நாளை ஆய்வு நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications