எப்படியாவது ஜல்லிக்கட்டை நடத்த மத்திய அரசு முயற்சிக்கும் - தமிழிசை
சென்னை: சுப்ரீம் கோர்ட்டில் ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தாலும் கூட பொங்கல் பண்டிகையை எப்படியாவது ஜல்லிக்கட்டோடு நடத்த மத்திய அரசு தொடர்ந்து முயற்சிக்கும் என்று தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.
சுப்ரீம் கோர்ட் ஜல்லிக்கட்டுக்கு மீண்டும் தடை விதித்துள்ளது. இது ஜல்லிக்கட்டு ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை கருத்து தெரிவிக்கையில், உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து சட்ட வல்லுனர்களின் கருத்தை அறிந்து மத்திய அரசு தொடர்ந்து தனது முயற்சியை எடுக்கும்.
எப்படியாவது ஜல்லிக்கட்டுக்கு அனுமதி பெற்று, இந்த பொங்கல் பண்டிகையை ஜல்லிக்கட்டோடு நடத்த முயற்சி எடுப்போம். இதுதொடர்பாக மத்திய அரசு நிச்சயம் நடவடிக்கை எடுக்கும். நாங்களும் மத்திய அரசிடம் தொடர்ந்து தொடர்பில் இருப்போம்.
அரசாணை மட்டுமே பிறப்பித்தால் போதுமானது, அவசரச் சட்டம் தேவையில்லை என்று கூறிய சட்ட வல்லுனர்களின் கருத்தின்படியே மத்திய அரசு அரசாணை பிறப்பித்தது. நல்லெண்ணத்தில்தான் இந்த அறிவிப்பை மத்திய அ்ரசு எடுத்தது. சிக்கல் வராது என்ற எண்ணத்தில்தான் அரசாணை மட்டும் பிறப்பிக்கப்பட்டது. எனவே சிக்கல்களை நிவர்த்தி செய்து ஜல்லிக்கட்டு நடைபெற மத்திய அ்ரசு நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம் என்றார்.