போராட்டமே வாழ்க்கையாகிப் போன தமிழக மக்கள்.. தலையில இடியென இறங்கும் கோர்ட் கறார்!
தமிழகத்தில் அனுமதியின்றி போராட்டம் நடத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது பொதுமக்களை அச்சமடைய வைத்துள்ளது.
மதுரை : பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது பொதுமக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
தமிழக அரசு மற்றும் மத்திய அரசின் அடக்குமுறைகள் காரணமாக நித்தமும் போராட்டத்தில் ஈடுபடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் மக்கள். தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான ஜனநாயக ரீதியிலான அணுகுமுறை இது என்றும் கூட அவர்கள் கருதுகின்றனர்.
போராடினால் மட்டுமே எதையும் பெற முடியும் என்பதை நிரூபித்தது தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்காக நடைபெற்ற தன்னெழுச்சி போராட்டம். சென்னை மெரீனாவில் லட்சக்கணக்கில் திரண்ட மக்கள் தங்களின் தமிழ் உணர்வை வெளிக்காட்டி நடத்திய போராட்டத்தின் உறுதி காரணமாக பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு மீதான தடை நீங்கியது.

உரிமைக்கான போராட்டம்
உரிமைக்காக போராடிய மக்கள், தங்கள் மீது திணிக்கப்படும் சமூக அநீதிகளுக்கு எதிராகவும் போராடி வருகின்றனர். உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் நெடுஞ்சாலைகளில் அகற்றப்பட்ட டாஸ்மாக் கடைகள் மாற்று இடங்களில் அமைக்கப்பட்டு வருகின்றன. இதனை எதிர்த்து சட்டப்போராட்டங்கள் ஒரு புறம் நடந்தாலும் பெண்களும், பொதுமக்களும் தங்களது எதிர்ப்பை வெளிக்காட்ட டாஸ்மாக்கை சூறையாடும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜனநாயக ரீதியில்
இதே போன்று மத்திய அரசின் மாட்டிறிச்சி தடையை கண்டித்து மாணவர்கள், சிறுபான்மையினர் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயப் பிரச்னைகளான நதிநீர் இணைப்பு, காவிரி நீரை பெற்றுத் தரும் கோரிக்கை, வறட்சி நிவாரணம் உள்ளிட்டவற்றிற்கு செவி சாய்க்காத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து விவசாய அமைப்புகளும் ரயில் மறியல், நூதன போராட்டங்களை நடத்தி வருகின்றன.

வேறு வழியில்லை
தமிழகத்தில் தலைவிரித்தாடும் பஞ்சத்தால் தண்ணீர் கிடைக்காத மக்கள் காலிக்குடங்களுடன் வீதிகளில் போராடுவது என்பது அன்றாட நிகழ்வாகிவிட்டது. பல நேரங்களில் பொதுமக்கள், விவசாயிகளின் போராட்டத்திற்கு அரசின் அனுமதி கிடைப்பதில்லை என்பதால் அவர்கள் தடையை மீறி போராட்டம் செய்து கைதும் செய்யப்படுகின்றனர். இந்த வழக்கம் நடைமுறையில் இருந்து கொண்டு தான் இருக்கிறது.

நடவடிக்கை கோரி மனு
நியாயமான கோரிக்கையாக இருந்தாலும் அனுமதியின்றி திடீரென சாலைகளில் இறங்கிப் போராடினால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் இதையே ஒரு பிரச்னையாக நினைத்து எபனேசர் சார்லஸ் என்பவர் சென்னை ஹைகோர்ட் மதுரைக் கிளையில் பொதுநலன் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் பொது இடங்கள், சாலைகளில் அனுமதி பெறாமல் போராட்டம், பொதுக்கூட்டம் நடக்கிறது. இதனால், பொது மக்கள் அவதிக்கு ஆளாகின்றனர் என்று குற்றம்சாட்டியிருந்தார்.

அறிவுறுத்தல்
எனவே அனுமதியின்றியும் எந்த வித முன் அறிவிப்பு இன்றியும் போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுதாரர் வேண்டுகோள் விடுத்திருந்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள் ஏஏ செல்வம், ஆதிநாதன் கொண்ட அமர்வு, சாலை மற்றும் பொது இடங்களில் முன்அனுமதி இல்லாமல் கூட்டம், போராட்டம் நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்றும் உத்தரவிட்டனர். பொதுக்கூட்டங்களுக்கு சிறுவர்களை அழைத்து வருவது வாடிக்கையாகிவிட்டது என்பதையும் நீதிபதிகள் சுட்டிக் காட்டினர்.












Click it and Unblock the Notifications