மீண்டும் சென்னையில் மழை... வட கடலோரங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை
சென்னை: தென் மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக சென்னையில் பரவலாக மழை பெய்து வருகிறது. தாழ்வுப் பகுதி அப்படியே நீடிப்பதாலும், வலுப்பெற வாய்ப்பில்லை என்பதாலும் இன்று வடகடலோர மாவட்டங்களில் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை மையத் தகவல்கள் கூறுகையில், இலங்கை, அதனை ஒட்டியுள்ள மன்னார் வளைகுடா பகுதியில், வெள்ளிக்கிழமை குறைந்தக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது. இந்தத் தாழ்வுப் பகுதியானது, தற்போது அதே இடத்தில் நிலை கொண்டுள்ளது.
மேலும், வட கிழக்குப் பருவமழை, வட கடலோர தமிழகத்தில் தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக, வட கடலோர தமிழகம், புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை பலத்த மழையும், தமிழகத்தின் மற்றப் பகுதிகளில் ஆங்காங்கே மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையைப் பொருத்தவரை பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இருப்பினும், நகரின் ஒரு சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
தமிழகம், புதுச்சேரி கடலோரப் பகுதிகளில், வடக்கு, வடமேற்கு திசையிலிருந்து மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என எச்சரிக்கப்ட்டுள்ளது.
சென்னையில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. சில இடங்களில் லேசான தூறல் மழை பெய்தது.
அதன் தொடர்ச்சியாக இன்று காலை முதலே சென்னையின் பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதேபோல், நாகை, விழுப்புரம் மற்றும் மதுரை உள்ளிட்ட பல பகுதிகளிலும் சாரல் மழை பெய்து வருகிறது.