சிக்னல்கள் பெறுவதை லேண்டர் நிறுத்தியது ஏன்.. மயில்சாமி அண்ணாதுரை பரபரப்பு விளக்கம்
Recommended Video
சென்னை: சிக்னல்கள் பெறுவதை லேண்டர் வாகனம் நிறுத்தியது ஏன் என்பது குறித்து சந்திரயான் 1 திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
நிலவின் தென்துருவத்தில் தண்ணீர், தாதுக்கள், கனிமங்கள் ஆகியவை குறித்து கண்டறிய சந்திரயான் 2 என்ற விண்கலத்தை கடந்த ஜூலை மாதம் 22-ஆம் தேதி விண்ணில் செலுத்தினர். இந்த விண்கலம் ஆர்பிட்டர், விக்ரம், ரோவர் ஆகிய 3 அமைப்புகளை கொண்டது.
விண்கலம் நிலவை நெருங்கியதை தொடர்ந்து ஆர்பிட்டரில் இருந்து லேண்டரும், அதில் உள்ள ரோவரும் கடந்த 2-ஆம் தேதி தனியாக பிரிந்தது. இந்த நிலையில் கடந்த 7-ஆம் தேதி அதிகாலை 1.54 மணிக்கு சந்திரனில் இருந்து 35 கிலோமீட்டர் உயரத்தில் சுற்றிக் கொண்டிருந்த லேண்டரை நிலவின் தென் துருவத்தில் தரையிறக்க விஞ்ஞானிகள் முயற்சித்தனர்.

தெரியவில்லை
ஆனால் நிலவில் தரையிறங்குவதற்கு வெறும் 2 நிமிடங்களுக்கு முன்னர் லேண்டரில் இருந்து கிடைக்க வேண்டிய சிக்னல்கள் துண்டிக்கப்பட்டன. இதனால் லேண்டர் வாகனம் தரையிறங்கியதா என தெரியவில்லை. இந்த நிலையில் அந்த லேண்டர் இருக்கும் இடத்தை ஆர்பிட்டர் படம் பிடித்து அனுப்பியுள்ளது.

மயில்சாமி
இதனால் லேண்டர், ரோவரில் உள்ள ஏதேனும் ஒரு உறுப்பை இயக்க முயற்சிப்போம் என இஸ்ரோ தலைவர் சிவன் கூறியிருந்தார். இந்த நிலையில் லேண்டரிலிருந்து சிக்னல்கள் கிடைப்பது நிறுத்தப்பட்டது ஏன் என்பது குறித்து சந்திரயான் 1 திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை சில தகவல்களை அளித்துள்ளார்.

ஏதுவாக இருக்காது
அவர் கூறுகையில், நிலவின் மேற்பரப்பில் உள்ள லேண்டரை ஆர்பிட்டரின் உதவியால் கண்டுபிடித்துவிட்டோம். அடுத்தது நாம் லேண்டருனான தொடர்பை பெற முயற்சிக்க வேண்டும். லேண்டர் இறங்கிய இடம், மெதுவாக தரையிறங்குவதற்கு ஏதுவாக இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

சிக்னலை பெறுமா
ஏதோ சில தடைகளால் நம்மால் லேண்டரில் இருந்து சிக்னல்களை பெற முடியவில்லை. சந்திரயான் 1-இல் ஆர்பிட்டர், லேண்டரை நோக்கி சிக்னல்களை அனுப்பியது. ஆனால் தற்போதைய சந்திரயான் 2- வில் லேண்டர், ஆர்பிட்டரிடம் இருந்து சிக்னலை பெறுமா என தெரியவில்லை.

விஞ்ஞானிகள்
எப்போதும் ஆர்பிட்டர் மற்றும் லேண்டர் இடையே இருவழி தொடர்பு இருக்கும். எனவே ஏதாவது ஒரு வழித் தொடர்பை பெற முயற்சிக்கலாம். இது மிகவும் இக்கட்டான சூழல்தான். ஆனால் நமது விஞ்ஞானிகளால் அவற்றை கையாளும் திறன் உள்ளது என்றார் மயில்சாமி.












Click it and Unblock the Notifications