கரூர் காங்கிரஸ் வேட்பாளரை மாற்றியே தீர வேண்டும்: டெல்லிக்கு பறக்கும் பேக்ஸ்!
கரூர்: கரூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளரை மாற்றியே தீர வேண்டும் என கரூர் காங்கிரஸ் நிர்வாகிகள் தங்களது தலைமைக்கு பேக்ஸ் மூலம் புகார் அனுப்பிய வண்ணம் உள்ளனர்.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் தனித்து போட்டியிடுகிறது. அக்கட்சிக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி போன்ற ஒரு சில கட்சிகளே ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் காங்கிரஸ் சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் அறிவித்தபோது, முதல் மற்றும் இரண்டாவது பட்டியலில் கரூர் தொகுதி வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படவே இல்லை.
இந்த நிலையில் யாரும் எதிர்பாராத நிலையில் கரூர் தொகுதியில் ஜோதிமணி போட்டியிடுவார் என டெல்லி காங்கிரஸ் தலைமை அறிவித்தது. இதனால் எம்.பி. சீட்டை எதிர்பார்த்து காத்திருந்த காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் கரூர் தொகுதியில் காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியிலும், தொண்டர்கள் மத்தியிலும் பெரும் கலகம் வெடித்தது.
மேலும், கரூர் அருகே உள்ள உப்பிடமங்கலம் மற்றும் தாந்தோனிமலையில் காங்கிரஸ் ஊழியர்கள் கூட்டத்தில் பேசிய வேட்பாளர் ஜோதிமணி என்னிடம் ரூ.2,400 தான் உள்ளது. என்னிடம் பெரிய அளவில் பணம் எல்லாம் இல்லை. நீங்கள் தான் பணம் செலவு செய்து தேர்தல் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்றார். இதற்கு தொண்டர்கள் மத்தியில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இது காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் டெல்லி தலைமைக்கு அனுப்பியுள்ள பேக்ஸில் கூறியிருப்பதாவது,
இந்த தேர்தலில் அதிமுக சார்பில் தம்பிதுரையும், திமுக சார்பில் சின்னசாமியும், தேமுதிக சார்பில் கிருஷ்ணனும் போட்டியிடுகின்றனர். அவர்களை எதிர்க்கும் அளவு பலம் வாய்ந்த வேட்பாளரை நிறுத்தினால் தான் சமாளிக்க முடியும்.
கடந்த முறையே ஜோதிமணி கட்சி நிர்வாகிகளுக்கு டீ, காபி கூட வாங்கி கொடுக்கவில்லை. மேலும் தேர்தல் செலவுக்கும், பூத் ஏஜெண்டுக்கும் பணம் கொடுக்கவில்லை. அவர் செலவு செய்யவே இல்லை. அதனால் தான் தோல்வியை தழுவினார்.
தற்போது தேர்தலுக்கு டெல்லி தலைமை கண்டிப்பாக பணம் தரும். அப்போது கட்சியினர் கூட இருந்தால், அவர்களுக்கும் பணத்தை பங்கு கொடுக்க வேண்டும் என்பதால் அனைவரையும் பிரித்து விடுகின்றார். இதன் காரணாக தொண்டர்கள் யாரும் வரவில்லை என்றால், அவர்கள் யாரும் வரவில்லை நான் என்ன செய்வேன் என நழுவிக் கொள்ள முயற்சி செய்கின்றார்.
ஜோதிமணியை எதிர்த்து கேள்வி கேட்டால் நான் ராகுல் காந்தியின் நெருங்கிய நண்பர் என்று கூறியே பலரையும் மிரட்டி வருகின்றார். எனவே, ஜோதிமணியை மாற்றினால் தான் தொகுதியில் நாங்கள் வேலை செய்ய முடியும். மேலும், ராகுல் காந்தி பெயரை தவறாக பயன்படுத்தும் ஜோதிமணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேஸ்க் அனுப்பியுள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து ஜோதிமணி கூறுகையில்,
பணத்தை எதிர்பார்த்து கட்சியில் யாரும் இல்லை. அப்படி எதிர்பார்ப்பவர் கட்சி நிர்வாகியாக இருக்க முடியாது. எங்கள் கட்சியில் எந்த பிரச்சனையும் இல்லை. எல்லோரும் நன்றாக தொகுதியில் தேர்தல் வேலை செய்கின்றோம். எனவே, எங்களுக்குள் எந்த சண்டையும் இல்லை என மறுக்கின்றார்.